இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்:பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை:தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை கடற்படைக்கு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு மூலம் இந்திய அரசு உதவி செய்யக்கூடாது எனக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகள் தகவல் பரிமாற்றத்திற்காக தொலைத் தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயல்பாட்டினை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், கடந்த 13ம் தேதி இலங்கை கடற்படை கப்பலில் நடைபெற்ற இந்திய இலங்கை கடற்படை உயரதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கை இனவாத அரசு விரித்துள்ள சதிகார வலையில் இந்திய அரசு தெரிந்து கொண்டே சிக்கியுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.
கடந்த 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், இலங்கை அரசு இந்தியாவோடு ராணுவ ஒப்பந்தம் செய்து, இதன் மூலம் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலுள்ள இடையே நடைபெறும் போரில் இந்திய உதவும் நிலையை இலங்கை அரசு வஞ்சகமாக முயற்சித்து வருகிறது.
அத்தகைய ராணுவ ஒப்பந்தத்தை இந்திய செய்யக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விளைவுகளை சுட்டிகாட்டி உங்களை நேரில் சந்தித்து அப்படி செய்யப்படும் ஒப்பந்தம் தமிழர்களுக்கு விரோதமான, விபரீதமான, மன்னிக்க முடியாத பெருந்தவறாக முடியும் என நான் கூறியபோது பிரச்சனையின் கடுமையை புரிந்துக் கொண்டு இந்தியா இலங்கையோடு, ராணுவ ஒப்பந்தத்தை செய்யாது என வாக்குறுதியளித்தீர்கள்.
இலங்கை விமான படைக்கு உதவும் வகையில் இந்தியா ராடார் சாதனங்களை தந்தது. இது குறித்து நான் உங்களிடம் கேட்டபோது, தமிழர்களுக்கு விரோதமாக பயன்படுத்தப்பட்டால் இந்திய ராடார் சாதனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் என உறுதியளித்தீர்கள்.
ஆனால் நடந்தது என்ன, திரும்ப பெறுவதற்கு பதிலாக நடைபெறும் போரில் மேலும் ராடார் சாதனங்களை இந்தியா அளித்துள்ளது.
யாழ்பாணத்தில் பரிதவிக்கும் தமிழர்களுக்கு கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் உலக தமிழர் கூட்டமைப்பினர் மக்களிடம் திரட்டிய மருந்து பொருள்களையும், உணவு பொருள்களையும் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு இந்திய அரசு வேண்டுமென்றே அனுமதி மறுத்துவிட்டது. நான் நேரில் உங்களை சந்தித்து கோரிக்கை வைத்தும் பயனில்லை.
இலங்கை அரசு தமிழ் இனத்தை கூண்டோடு அழிக்க முற்பட்டு சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு நாடுகளிலிருந்து ஏராளமான ஆயுதங்களை பெற்று, தமிழ் இனக் கொலையையும், ராணுவ தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் இந்தியா ராணுவரீதியான உதவிகளை செய்து வருகிறது.
இந்திய அரசின் இத்தகைய செயல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது. தமிழர்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்யும் துரோகம் என குற்றம் சாட்டுகிறேன்.
எனவே இந்தியா, இலங்கை கடற்படைகளுக்கு இடையில் செய்யப்படும் தகவல் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications