இன்று பி.இ. கவுன்சிலிங் தொடக்கம்-தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை:பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங இன்று தொடங்குகிறது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. மொத்தம் 95 ஆயிரம் மாணவ, மாணவியர் இதில் கலந்து கொள்கின்றனர்.
முதல் நாளான இன்று உடல் ஊனமுற்றோருக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. நாளை முதல் 21ம் தேதி தொழிற் கல்வி (வொகேஷனல்) மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் கவுன்சிலிங நடைபெறுகிறது. 22ம் தேதி வெளி மாநில மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
23ம் தேதி பொது கவுன்சிலிங் தொடங்குகிறது. பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளுமாறு 91 ஆயிரத்து 93 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு கவுன்சிலிங்குக்காக வரும் மாணவ, மாணவியருக்கும், அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுய உதவிக் கல்லூரிகளில் மொத்தமாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சீட்கள் 65 ஆயிரத்து 500 ஆகும்.
விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் நிச்சயம் சீட் உண்டு. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 5000 முதல் 10 ஆயிரம் சீட்கள் வரை நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பி.இ. கவுன்சிலிங்குக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்து வழக்கை தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications