புறக்கணிப்பு: எம்.பி, எம்.எல்.ஏக்களுக்குகட்சிகள் உத்தரவிட முடியாது-ஆணையம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதும், புறக்கணிப்பதும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் உரிமை. இதுதொடர்பாக கட்சிகள் உத்தரவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக 3வது அணி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, இப்படிக் கூற சட்டத்தில் இடம் இல்லை. எனவே இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது.
இந்தப் புகாரைப் பரிசீலித்த சேர்தல் ஆணையம் நேற்று மாலை தனது முடிவை அறிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் வாக்களிப்பது என்பது எப்படிக் கட்டாயம் இல்லையோ, அதுபோலவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வாக்களிப்பது கட்டாயம் இல்லை.
வாக்காளரின் வாக்களிப்பு உரிமை பற்றி இந்திய தண்டனைச் சட்டம் 171ஏ(பி) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பியோ அல்லது எம்.எல்.ஏவோ தாங்கள் விரும்பினால், விரும்பும் நபருக்கு வாக்களிக்கலாம். அல்லது வாக்களிக்காமலும் இருக்கலாம். இது அவரவர் விருப்பம்.
இது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், யாருக்குப் போடக் கூடாது, தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து எம்.பி., எம்.எல்.ஏக்களிடையே அவர்கள் பிரசாரம் மேற்கொள்ளலாம். ஆனால் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்பதை கொறடா உத்தரவாக அவர்கள் பிறப்பிக்க முடியாது. அப்படி உத்தரவிட்டால் அது 171ஏ(பி) பிரிவின்படி குற்றமாகும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் கட்சி கொறடா உத்தரவுக்கு மாறா உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. அப்படிச் செய்தால் அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்படும். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் அது பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாஜகவின் கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications