ஸ்கூட்டர் ஓட்டிய சிறுவனை உதைத்தஎஸ்.ஐ. - காவல் நிலையம் முற்றுகை
சென்னை:சென்னையில் ஸ்கூட்டர் ஓட்டிப் பழகிய சிறுவனை காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று அடித்த சப் இன்ஸ்பெக்டரைக் கண்டித்து அவனது பெற்றோரும், பொதுமக்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுப்பேட்டை வெங்கடாச்சல நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரது மகன் அஜய் (வயது13) ஏழாவது வகுப்பு படித்து வருகிறான்.
தனது தந்தையின் ஸ்கூட்டரை எடுத்த அஜய், அப்பகுதியில் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக ரோந்து வந்துள்ளார் எழும்பூர் சப் இன்ஸ்பெக்டர் ராமு.
அஜய் ஸ்கூட்டர் ஓட்டுவதைப் பார்த்த அவர் அவனைக் கூப்பிட்டு தலையில் அடித்து, இந்த வயதில் ஸ்கூட்டர் ஓட்டுகிறாயா என்று திட்டியுள்ளார். பின்னர் ஸ்கூட்டரைப் பறிமுதல் செய்து கொண்டு விரட்டியுள்ளார்.
ஆனால் ஸ்கூட்டரைக் கொடுத்தால்தான் போவேன் என்று சப் இன்ஸபெக்டரிடம் கெஞ்சியுள்ளான் அஜய். இதனால் கோபமடைந்த ராமு, சிறுவனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையம் கொண்டு சென்றார்.
அங்கு வைத்து அஜய்யை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. தகவல் அறிந்த அஜய்யின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
பின்னர் அஜய்யை போலீஸார் விடுவித்தனர். அவனது தலையில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததாக தெரிகிறது. மயக்கத்தில் இருந்த அஜய்யை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அஜய்யின் உறவினர்கள் கூறுகையில், சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாகத் தாக்கியுள்ளார் சப் இன்ஸ்பெக்டர் ராமு.
ஸ்கூட்டர் ஓட்டக் கூடாது என்று சொல்லி விரட்டியிருந்தால் பரவாயில்லை. அதை விடுத்து காவல் நிலையத்திற்குக் கூட்டி வந்து கடுமையாகத் தாக்கி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து விடுவேன் என்றெல்லாம் கடுமையாக மிரட்டியுள்ளார்.
அஜய்க்கு எதாவது நடந்தால் அதற்கு ராமுதான் பொறுப்பு என்று ஆவேசமாக கூறினர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், நான் ரோந்து போனபோது ஒரே ஸ்கூட்டரில் 3 சிறுவர்கள் சவாரி செய்து கொண்டிருந்தனர். சிறுவர்களாயிற்றே என்று அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் அறிவுறை கூறி தலையில் ரெண்டு தட்டு தட்டினேன். அதைப் பெரிதுபடுத்தி விட்டனர் என்று கூறியுள்ளார் சப் இன்ஸபெக்டர் ராமு.
இவர் ஏற்கனவே இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளாராம். இடமாற்றமும் வந்து விட்டதாம். விரைவில் மெரீனா கடற்கரை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்குப் போகப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications