ஜெ. ஒரு ஆர்எஸ்எஸ் விசுவாசி- காங்கிரஸ்:3வது அணி உடைந்துவிட்டது- இடதுசாரிகள்
டெல்லி:உருவாகி 2 மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 3வது அணி உடைந்து போய் விட்டதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூறியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது என 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக மட்டும் இன்று தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போட்டது.
அதிமுகவின் இந்த தடாலடி போக்கு 3 வது அணித் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அதிமுகவின் செயலால், 3வது அணி உடைந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறுகையில், 2 மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 3வது அணி உடைந்து விட்டது. அதிமுக தனியாக போனதன் மூலம் இனிமேல் 3வது அணிக்கு எதிர்காலம் இல்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனதளவில் ஒரு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசி ஆவார். அதைத்தான் தற்போது நிரூபித்துள்ளார்.
பிரதீபா பாட்டீல் 6 லட்சம் ஓட்டுக்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவார். ஷெகாவத்துக்கு 3 லட்சம் ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், 3வது அணி உடைந்து விட்டது. பிரதீபா பாட்டீல் மிகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்றார்.
மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி கூறுகையில், பாட்டீலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரத்தையும் 3வது அணியினரால் நிரூபிக்க முடியவில்லை. குற்றம் சாட்ட மட்டுமே முடிந்தது என்றார்.
இன்றைய தேர்தலில் 3வது அணியைச் சேர்ந்த அதிமுக மட்டுமே ஷெகாவத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால் மற்ற கட்சிகள் அனைத்தும் சொன்னது போல தேர்தலைப் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications