கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு
சென்னை:மத்திய அரசின் அலட்சியப் போக்கால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு மானிய விலையில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதற்கான மானியத் தொகையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
ஆனால் கடந்த 5 வருடங்களாக கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு தராமல் இழுத்தடித்து வருகிறதாம். இதனால் எண்ணை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், ரூ. 293க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தயாரிப்பு விலையை விட ரூ. 160 குறைவாகும். எனவே கேஸ் சிலிண்டரின் விலையை வெகுவாக உயர்த்த வேண்டும் என எண்ணை நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இந் நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை ஹோட்டல்கள், டீக்கடைகளுக்கு கருப்பு மார்க்கெட்டில் அதிக விலைக்கு பல விற்பனையாளர்கள் விற்று வருகின்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எண்ணை நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு மத்திய அரசு சிலிண்டர் விலையை உயர்த்தாமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் தற்போது சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டரைப் பதிவு செய்தால் குறைந்தது 10 நாட்கள் கழித்துத்தான் கிடைக்கிறது. சேலம் மாவட்டத்தில் புக் செய்து 2 வாரங்கள் ஆகியும் கேஸ் வராததால் பொதுமக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்டம், கருப்பூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மேலாளர் நாகராஜன் கூறுகையில்,
தமிழகத்துக்கு தேவையான சிலிண்டர்கள் வட மாநிலங்களிலிருந்து தான் வரவழைக்கப்படுகிறது. கப்பல்கள் மூலம் மங்களூர் வந்து லாரிகள் மூலம் திருச்சி, மதுரை, கிணத்துக்கடவு, புதுச்சேரி, சென்னை, சேலம் மற்றும் பெருந்துறை ஆகிய இடங்களில் இருக்கும் ஐ.ஓ.சி. பாட்டிலிங் பிளான்ட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
மங்களூரிலிருந்து 390 டன் கேஸ் கருப்பூர் பிளான்ட்டுக்கு வரவிருக்கிறது. அதனால் சப்ளையில் இனிமேல் தட்டுப்பாடு இருக்காது என்றார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய மானியத்தை முறையாகக் கொடுத்தால், கேஸ் தட்டுப்பாடு இருக்காது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications