தமிழ் பேச மறுக்கும் டாக்டர்கள்: கனிமொழி கோபம்
சென்னை:தமிழக அரசின் நிதியுதவியுடன் மருத்துவம் படித்து விட்டு, தங்களை நாடி வரும் அப்பாவி நோயாளிகளிடம், அவர்களுக்குப் புரியாத ஆங்கிலத்தில் பேசுவதை டாக்டர்கள் நிறுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி கூறியுள்ளார்.
![]() |
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக நாள் விழா மற்றும் மருத்துவத் தமிழ் மேம்பாட்டுஅமைப்பின் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.
முதல்வரின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், தமிழகத்தில் படித்துப் பட்டம் பெறும் டாக்டர்கள் மாநில அரசின் நிதியுதவியுடன்தான் படிக்கிறார்கள். ஆனால் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் தமிழில் பேசுவதில்லை. தமிழ் தெரிந்தாலும் கூட தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதனால் சாதாரண மக்களுக்கு டாக்டர்கள் பேசுவது புரிவதில்லை.
நோயாளிகளிடம் லத்தீன் மொழியில் உள்ள நோயின் பெயரை நீட்டி முழக்கிக் கூறும்போதே அவர்களுக்கு இனம் புரியாத மிரட்சி ஏற்பட்டு விடுகிறது.
டாக்டர்களை நம்பி நோயாளிகள் தங்களை ஒப்படைக்கிறார்கள். எனவே அவர்களுக்குப் புரியும் வகையில் பேசி, அவர்களுக்கு அணுசரணையாக நடந்து கொள்ள டாக்டர்கள் முயற்சிக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக தமிழ் மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நோயாளிகள் நிறையப் பேர் வருகின்றனர். எனவே அங்குள்ள டாக்டர்கள், கஷ்டப்பட்டு வங்காள மொழியைக் கற்றுக் கொள்கின்றனர். ஆனால் அந்த ஆர்வம் தமிழ் தெரியாத டாக்டர்களிடம் காணப்படுவதில்லை. இது வேதனை தருகிறது என்றார் கனிமொழி.
சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications