ஜனாதிபதி தேர்தல்-வாக்குப் பதிவு தொடங்கியது
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் வாக்களித்தனர்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து இன்று குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பைரான் சிங் ஷெகாவத்தும் போட்டியிடுகின்றனர்.
இதனால் இரு முனைப் போட்டி நிலவுகிறது. இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்கள் கூறப்பட்டன. பெரும் விமர்சனங்களையும் அவர் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை வளாகங்களில் ஓட்டுப் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.பிக்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்குச் சீட்டும், எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்குச் சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.
காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்குக் கொண்டு செல்லப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 4,895 வாக்காளர்கள் (எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்) உள்ளனர். ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.
எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்கு மதிப்பு மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களித்தார். மற்ற தலைவர்களும் வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications