ஜெயா டிவி பங்குதாரர் தலைமறைவுவைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
மதுரை:கைது நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரரும், வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபருமான வைகுண்டராஜன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். கடற்கரை மணலில் உள்ள தாதுக்களைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை இவர் நடத்தி வருகிறார்.
இந்த மணல் எடுப்பதில் பல முறைகேடுகளை இவர் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அதைத் தட்டிக் கேட்பவர்களை குண்டர்களைக் கொண்டு மிரட்டுவது உள்பட அடாவடிகளுக்கு பேர் போனவர்.
ஜெயா டிவியின் பெரும்பான்மையான பங்குகளும் இவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாக தாது மணலை கடத்த தனது லாரிகளை பயன்படுத்தியதாக கூறி வைகுண்டராஜன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார். தலைமறைவாக இருந்தபடியே தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரைப் பிடிக்க முடியாமல் காவல் துறை தவித்து வருகிறது.
இவரைப் பிடிக்க முயன்று வரும் தனிப் படையின் செயல்பாடுகளை வைகுண்டராஜனுக்கு காக்கிகளிலேயே சிலர் தகவல் தந்துவிடுவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வைகுண்டராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகுண்டராஜன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது பொய் வழக்கு. பழிவாங்கும் நோக்கத்துடன் திமுக அரசு இந்த வழக்கைப் போட்டுள்ளதாக வாதாடினார். அரசுத் தரப்பில் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏற்கனவே வைகுண்டராஜனின் நிறுவனங்களில் பல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications