து.ஜனாதிபதி தேர்தல்-16 பேர் மனு தாக்கல்:தமிழக டாக்டரின் மனு தள்ளுபடி
டெல்லி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை மொத்தம் 16 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் நேற்று மனுதாக்கல் செய்தார்.
இதுவரை மனு தாக்கல் செய்துள்ளவர்களில் மசூத்தைத் தவிர மற்றவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். காரணம், அவர்களுக்கு ஆதரவாக முன்மொழிந்தும், வழிமொழிந்தும் எம்.பிக்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மசூத் தவிர மேலும் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். டெல்லியைச் சேர்ந்த டாக்டர் குரு கியான் காந்தி ஹரீஷ் சந்திர துவா என்பவர் நேற்று மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே இருமுறை மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தனது மனுவுடன் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் உள்ளதற்கான சான்றிதழை அவர் இணைக்கவில்லை. இதனால் அந்த மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன.
நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதற்கான சான்றிதழை இணைத்திருந்தார். இதையடுத்து அவரது மனு பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
அதேபோல, வேலூரைச் சேர்ந்த டாக்டர் சந்திரவதனன் என்பவரும் மனு தாக்கல் செய்தார். ஆனால் தனது மனுவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதற்கான சான்றிதழை இவர் இணைக்கவில்லை. மேலும் டெபாசிட் தொகையும் கட்டவில்லை. எனவே இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
வேட்பு மனுத் தாக்கலுக்கான கடைசித் தேதி 23ம் தேதியாகும்.












Click it and Unblock the Notifications