பிஇ, எம்பிபிஎஸ் சேர்க்கை-அரசுக்கு ஜெ. கண்டனம்
சென்னை:தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசு கடைப்பிடித்துள்ள தவறான கொள்கை காரணமாக மாணவ, மாணவியர் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால், இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவற்காகக் காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.
அத்தோடு மட்டுமல்லாது, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர், மாணவியருக்கான படிப்புக் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.
மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தையும் அவர்களின் லட்சியக் கனவுகளையும் தகர்க்கும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மொத்தம் உள்ள சுமார் 240 சுய நிதிக் கல்லூரிகளில் 160 சுய நிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களைத் தர முன்வந்துள்ளன. ஆனால் அரசு ஒதுக்கீட்டிற்காக இந்தக் கல்லூரிகள் தர முன்வந்துள்ள இடங்கள் பெரும்பாலும் காலியாகத்தான் இருக்கும். அதைத்தான் இந்தக் கல்லூரிகள் தர முன்வந்துள்ளன.
அரசு ஒதுக்கீட்டிற்கு இடம் தர முன்வராத மற்ற 80 கல்லூரிகளும், மாணவ, மாணவியர் அதிகம் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னணியில் உள்ள கல்லூரிகள் ஆகும்.
எந்தெந்த சுய நிதிக் கல்லூரிகள் இடம் தர முன்வந்துள்ளன. எவை முன்வரவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்தாததால் மாணவ, மாணவியர் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த உண்மையை மூடி மறைத்து மீண்டும் மாணவ, மாணவியர்களை ஏமாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பது வேதனைக்குரியதாகும்.
உண்மையில், மாணவ, மாணவியர் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருக்குமானால், கடந்த ஆண்டு தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சட்டத்தைக் கொண்டு வந்தபோதே, தனியார் சுய நிதிக் கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களையும் ஒற்றைச் சாளர அடிப்படையில்தான் நிரப்ப வேண்டும் என சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் அரசின் அலட்சியத்தாலும், நிர்வாக குழப்பத்தாலும் ஆண்டாண்டு காலமாக ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்குக் கிடைத்து வந்த பொறியியல் கல்லூரி இடங்கள் தற்போது அவர்களுக்குக் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு வேறு தொழிற் கல்விப் படிப்பில் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டுக்குரிய கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று முதலில் குறிப்பிட்டிருந்தது அரசு. ஆனால் பின்னர் அதை மாற்றி விட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
அதை ஏற்று உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பெற்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று வந்துள்ளனர். இதனால் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் ெகாண்டு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான, விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications