முல்லைப் பெரியாறு தமிழகம், கேரளாவுக்குஉச்சநீதிமன்றம் புது உத்தரவு
டெல்லி:முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் தங்களது தரப்பு நியாயத்தை விளக்கி அபிடவிட் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக, கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் உண்மையான கொள்ளளவு 152 அடியாகும். கேரள அரசின் தலையீடு காரணமாக 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு 136 அடியாக அதை சுருக்கி விட்டது கேரளா. இதற்கு மேல் நீர் தேக்கினால் அணை உடைந்து விடும், மக்களுக்கு ஆபத்தாகி விடும் என அது சொத்தைக் காரணங்களைக் கூறி வருகிறது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 142 அடியாக அணையின் உயரத்தை அதிகரிக்கலாம் என தீர்ப்பு வந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை செல்லாக்காசாக்கி விட்டது.
கேரள அரசு கொண்டு வந்த சட்டத்ைத எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வக்கீல்களும் அப்போது ஆஜராகி வாதாடினர். பின்னர் இரு மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் தங்களது தரப்பு நியாயங்களை விளக்கி அபிடவிட் தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அன்றைக்குள் அபிடவிட் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
புது அணை கட்ட கேரளா முஸ்தீபு:
இந் நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிதாக ஒரு அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நாங்கள் கட்டும் இந்த புதிய அணையால் தற்போது இருக்கும் முல்லை பெரியாறு அணைக்கு எந்தவொரு பாதிப்பும் வராது. மத்திய அரசிடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்காமல் இந்த அணை கட்டி முடிக்கப்படும்.
தேவையில்லாமல் தற்போது இருக்கும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு கோரிக்கை விடுப்பது ஆபத்தான செயலாகும். அதன் மூலம் அசம்பாவிதங்கள் நடந்தால் கேரளாவுக்கு பயங்கர சேதம் ஏற்படும் என்றார்.
இதனால் மூலம் தமிழகத்துக்கு உதவும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரை முன்னதாகவே கேரளத்தால் தடுத்து நிறுத்த முடியும்.
முல்லைப் பெரியாரை அடையும் நீர் தமிழகத்தை அடைந்த தீரும் நிலையில், அதை முன் கூட்டியே அணை கட்டி தடுக்கும் கேரளத்தின் செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது மிக அவசியம்.
இல்லாவிட்டால் தமிழகத்தின் மதுரை உள்ளிட்ட பெரியாறு ஆற்றுப் பாசன விவசாய நிலங்கள் சஹாரா ஆவது நிச்சயம்.












Click it and Unblock the Notifications