திமுகவை அழிக்க நினைத்தால்..ஸ்டாலின்
ஈரோடு:திமுகவை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களே அழிந்து போவார்கள் என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஈரோட்டில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, திமுக ஆரம்பிக்கப்பட்ட நாள் விழா என 3ம் சேர்த்து வரும் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.
ஆட்சிக்கு வந்தது முதல் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, கேலி, கிண்டல், ஏளன பேச்சுக்கள் பேசியவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளார்.
விவசாயிகளுக்கு ரூ. 7,000 கோடி கூட்டுறவு கடனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதில் என்னவொரு கொடுமை என்றால், இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் 90 சதவீதம் பேர் அதிமுகவினர்தான். இருந்தாலும் கட்சி வேறுபாடு பார்க்காமல் நல்லதை செய்தோம்.
ஆனால், அதிமுகவின் தலைவி குறை பேச்சு பேசுகிறார். கூட்டுறவு வங்கி கடனை ரத்து செய்தால் மட்டும் போதாது. நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இந்தக் கடன்களை எல்லாம் ரத்து செய்ய நாங்கள் என்ன உலக வங்கியா?
இலவச கலர் டிவி கிடைக்காதவர்கள் கவலை அடைய வேண்டாம். கல்யாண வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது. அதே போல் தான் இதுவும். அடுத்த பந்தியில் நிச்சயம் டிவி கிடைக்கும். குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கண்டிப்பாக கலர் டிவி கொடுப்போம். இதற்காக 4வது முறையாக மீண்டும் டெண்டர் விடப் போகிறோம்.
கருணாநிதி கொண்டு வரும் திட்டங்களை நிறுத்துவது தான் ஜெயலலிதாவின் வேலையாக இருந்தது. 1989ல் ஏழைப் பெண்களின் திருமணத் திட்டத்திற்காக ரூ.5,000 ஆயிரம் கொடுத்தார் கருணாநிதி. ஆனால் அதை ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தடுத்து நிறுத்தினார் ஜெயலலிதா. ஆனால் இப்போது ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவியை முதல்வர் ரூ.15,000 ஆக்கிவிட்டார்.
திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது. மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது என்றெல்லாம் பேசுகிறார் ஜெயலலிதா. குடும்பத்தை பற்றியோ அல்லது மக்களைப் பற்றியோ பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது.
தனிக் கட்டையாக வாழும் அவருக்கு குடும்பம் கிடையாது. மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது என்று சொல்லும் ஜெயலலிதா கொடநாட்டில் போய் ரெண்டு நாள் ஓய்வெடுக்க கோடிக்கணக்கு மதிப்பு கொண்ட மாளிகை கட்டியுள்ளார்.
ஆட்சியில் இருந்தபோது ஜெயலலிதா எப்படியெல்லாம் கோடி கோடியாக ஊழல் செய்தார், மக்கள் பணத்தை கொள்ளையடித்தார் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
இதுவரை திமுகவை அழிக்க நினைத்தவர்கள் பலரும் தோல்வியை தான் சந்தித்துள்ளனர். அயராத தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சி திமுக. அதை அழிக்க நினைப்பவர்கள் தானாகவே அழிந்து போவார்கள். எந்த கொம்பனாலும் திமுக என்ற இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications