மது பாட்டில்கள்: தமிழக-கேரள எல்லையில் சோதனை
குற்றாலம்:தமிழகத்தில் கேரளத்தின் தென் மாவட்ட அருவிகளுக்கு மதுபாட்டில்களோடு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில எல்லையில் கேரள போலீசார் வாகனங்களை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ள நிலையில் தினமும் பல்லாயிரக்கானக்கான பயணிகள் வந்து ஆனந்தக் குளியல் போட்டு வருகின்றனர்.
குற்றால அருவிகளில் குளித்து விட்டு அங்கிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ள பாலருவி, அச்சன்கோவில் கும்பா உருட்டி அருவி, மணலாரு பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.இதில் பல இளைஞர்கள் குடித்து கும்மாளம் போட மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இதனால் கேரள அருவிப் பகுதிகள் முழுவதும் மது பாட்டில்களால் நிறைந்துள்ளன. மேலும் போதையில் சண்டையும் மூண்டு வருகிறது.
மேலும் குடித்துவிட்டு பாட்டில்களை அருவிக்குள்ளேயே உடைக்கும் செயலும் நடக்கிறது. இதனால் அங்கு குளிக்கும் பயணிகள் காலில் கண்ணாடிகள் குத்தி ரத்தம் வழியும் நிலையும் ஏற்படுகிறது.
மேலும் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ள அருவிகளில் உடைக்கப்படும் பாட்டில்கள் மிருகங்களையும் பதம் பார்க்கின்றன. உடைந்த கண்ணாடி துண்டுகள் மிருகங்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. இதில் காலில் புண்களாகி விலங்குகள் இறக்கும் சூழலும் உருவாகிறது என அம் மாநில வனத்துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து கேரள பகுதியில் நுழையும் வாகனங்களில் அம் மாநில போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்துள்ளனர். அம் மாநில மதுவிலக்கு போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அங்கேயே உடைத்து விடுகின்றனர்.
குற்றாலம், பாபநாசம், பானதீர்த்தம், அகஸ்தியர் அருவிகளிலும் குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுள்ளது. இதைத் தடுக்க கேரள போலீஸ் போல தமிழக போலீசாரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
எரிசாராயம் கடத்தல்:
இது தவிர தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு திருநெல்வேலி மாவட்டம் புளியரை, குமரி மாவட்டம் களியாக்கவிளை, தேனி மாவட்டம் இடுக்கி, கோவை மாவட்டம் பாலக்காடு உள்ளிட்ட எல்லைகள் வழியாக தினமும் பல ஆயிரக்கனக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த வாகனங்களின் மூலம் பல்வேறு நூதன முறையில் அம்மாநிலத்திற்கு தொடர்ந்து எரிசாராயம் கடத்தலும் நடந்து வருகிறது.
இதனால் அம் மாநில சோதனைச் சாவடிகளில் மாநில எக்ஸைஸ் தனிப்படையினரும் சோதனை செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் முட்டை லாரியில் எரி சாராயம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆக்ஜிஸன் டேங்கரிலும் எரி சாராயம் கடத்தப்பட்டது பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications