அதிரடிப்படையினரை சுற்றி வளைத்தபோலீஸ் - கிராமத்தினரால் வந்த குழப்பம்
தர்மபுரி:நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிராமத்தினர் கொடுத்த தகவலை நம்பி வந்த போலீஸார், அதிரடிப்படை போலீஸாரை சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ளது தென்கரை கிராமம். இந்தக் கிராமத்தையொட்டி அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது. அங்கு செல்லியம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்கு அருகே துப்பாக்கிகளுடன் ஆட்கள் நடமாடுவதைப் பார்த்த கிராமத்தினர் அவர்கள் நக்சலைட்டுகளாக இருக்கலாம் என நினைத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸார் துப்பாக்கிகளுடன் அவர்களை முற்றுகையிட்டனர். கடைசியில் பார்த்தால், அவர்கள் நக்சலைட்டுகளை வேட்டையாட வந்த அதிரடிப்படையினர் என்று தெரிய வந்தது.
இதனால் நக்சலைட்டுகளைப் பிடிக்க வந்த போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கிராமத்தினர் தவறான தகவலைக் கொடுத்திருந்தாலும் கூட அவர்களது உஷார்தன்மையைப் பாராட்டும் வகையில், தகவல் கொடுத்த ஊராட்சித் தலைவரின் கணவர் புருஷோத்தமன், ஊர்ப் பிரமுகர் பாபு, பூசாரி சீனிவாசன் ஆகியோருக்கு தலா ரூ. 500 பரிசு அளிக்க எஸ்.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications