சேது திட்டமும் மூட நம்பிக்கையும்-புவியியல் வல்லுனர் தாக்கு
சென்னை:சேது கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லும்படி கடலில் பாதை அமைத்தால் அது ஆபத்தை விளைவிக்கும் என புவியியல் வல்லுநர் உதயணன் பிள்ளை கூறியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் புவியியல் பேராசிரியர் உதயணன் பிள்ளை பேசுகையில்,
பூமியின் அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாமிருக்கும் இந்திய துணைக்கண்டம் முன்பு இருந்தது போல் இப்போது கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலை எல்லாம் ஒரு கட்டத்தில் தான் உருவானது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் 21 பவழப் பாறைத் தீவுகள் உள்ளன. இதில் ஒரு தீவு மட்டும் நல்ல தண்ணீர் தீவு. கடல் நீர் மட்டத்தை விட அந்தத் தீவின் நீர்மட்டம் உயரமானது. இவையெல்லாம் இயற்கையாக ஏற்பட்டது.
இதற்கு எல்லாம் கதையும், காரணமும் சொல்ல முடியாது. அதேபோலத்தான் குறைந்த ஆழமுள்ள பகுதிகளில் அதிக வெப்பம், உப்புத்தன்மை ஆகியவற்றால் பவழப் பாறை உருவாகிறது.
பவழப் பாறைகள் எல்லாம் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி எல்லாம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை. இவையெல்லாம் அறிவியல்பூர்மாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறை வால் வடிவில் உள்ளதாக மூட நம்பிகையான கருத்துக்களை சொல்கிறார்கள். கடலுக்குள் ஏற்படும் இயற்கை மாற்றங்களாலும், நீரோட்டங்களின் தாக்குதலாலும் ராமேசுவரம் பகுதியில் இருக்கும் பவழப் பாறை வால் வடிவில் மாறியுள்ளது.
கடலில் இருப்பது பாலம் அல்ல கடினமான மணல் மேடுதான் என நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விஞ்ஞானிகள் சொல்வதையும், தொழில்நுட்பங்களையும் மதிக்காமல் மதவாதிகள் சொல்லும்படியாக சேதுகால்வாய்க்கு பாதை அமைத்தால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அப்படி அமைத்தால் ராமேசுவரத்திற்கு பெரிய சேதத்தையும், இயற்கைக்கு விரோதமான செயலாகவும் அமைந்து விடும்.
சேது கால்வாய் திட்டத்தில் பவழப் பாறையை வெட்டுவதால் இயற்கைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதே நேரத்தில் இயற்கையான நீரோட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனவும் தொடர்ந்து ஆய்வும் நடக்கிறது என்றார் பிள்ளை.












Click it and Unblock the Notifications