ஹெலிகாப்டர்களை இயக்க சுற்றுலா துறை திட்டம்
குற்றாலம்: தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூறினார்.
குற்றாலத்தில் சாரல் திரு விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
குற்றாலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவது சுற்றுலாத் துறைக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிக்கைகளும் இதற்கு ஒரு காரணம். பத்திரிக்கைகளில் குற்றாலம் குறித்த தகவல்களை பார்த்துதான் நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
தேசிய அளவிலும், வெளநாடுகளில் சுற்றுலா தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகளில் குற்றாலத்தின் சிறப்புகள் அடங்கிய கையேடுகளையும் படங்களையும் விநியோகம் செய்து வருகிறோம்.
![]() |
சுற்றுலாத்துறையின் விடுதிகளில் ஆன்-லைன் புக்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா துறையின் சார்பில் ரூ.2.7 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதத்தில் இப்பணிகள் நிறைவடையும். குற்றாலத்தை மத்திய அரசின் வரைபடத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் முதல் ஐந்தருவி வரை இன்னும் ஒரு மாதத்திற்குள் சாலை ஓரங்களில் சோடியம் விளக்குகள் அமைக்கப்படும். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு 4 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து 12 லட்சம் பேர் வந்துள்ளனர். இந்த ஆண்டு இது 13 லட்சமாக உயர்ந்துள்ளது.
குற்றாலத்திற்கு கடந்த ஆண்டு 30.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜீலை 25-ம் தேதி வரைக்குமே 20.2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
சுற்றுலாத் துறை சார்பில் திருச்சியில் கேட்டரிங் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இதுபோன்று மேலும் கேட்டரிங் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மதுரையை மையமாக வைத்து சுற்றுலாத்துறை மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 4 மாதத்திற்குள் தனியார் உதவியுடன் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
அதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலையில் ரோப்கார் அமைக்க தனியார் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்பி அப்பாத்துரை , அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, மைதீன் கான், சுரேஷ் ராஜன், எம்எல்ஏக்கள் அப்பாவு, கருப்பசாமி பாண்டியன், கலெக்டர் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications