இந்திய முதலீடுகளை கோரும் இலங்கை
டெல்லி:இந்திய நிறுவனங்கள், இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசநாயகே கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி வந்துள்ள திசநாயகே, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய நிறுவனங்கள் இலங்கையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக எண்ணை உற்பத்தி, சுத்திகரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பிரிவுகளில் அதிக அளவிலான இந்திய முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது.
திரிகோணமலையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை இலங்கை அரசு உருவாக்கவுள்ளது. இதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியிலும் இந்திய நிறுவனங்கள் எங்களுக்கு உதவலாம்.
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாத வாக்கில், முதலீட்டு கண்காட்சி ஒன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி, இந்திய நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படவுள்ளது.
இந்த கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி, ஆயத்த ஆடை தொழில் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். இந்த கண்காட்சியில் அதிக அளவிலான இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
இலங்கையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் மசகு எண்ணைய் உற்பத்திப் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, இலங்கையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் அமைச்சர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications