கூடுதல் கட்டணம்-தனியார் மருத்துவகல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசு நியமித்த ராமன் கமிட்டி பரிந்துரை செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க கடந்த ஆட்சியில், ராமன் கமிட்டி அமைக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளான செட்டிநாடு மருத்துவக் கல்லூரி ரூ. 3 லட்சம், தாய் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி ரூ. 2.30 லட்சம், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி ரூ. 2.25 லட்சம் வசூலிக்கலாம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இதை மீறி இந்தக் கல்லூரிகள் ரூ. 4 லட்சம் வரை கட்டணமாக வசூலித்தன. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக் கோரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் அப்பீல் செய்தன. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ராமன் கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டணத்தைத்தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்திருந்தால் அடுத்த ஆண்டு கட்டணத்தில் இதை சரி செய்ய வேண்டும்.
கட்டணத்தை உயர்த்துவது குறித்து ராமன் கமிட்டியிடம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் முறையீடு செய்யலாம்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதாக மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் பிரமாணப் பத்திரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 17ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications