வெள்ளை ரவி என்னை கடத்த முயன்றானா?:போலீஸ் சொல்வது பொய் - மாஜி வெங்கடசாமி
ஓசூர்:போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவி என்னைக் கடத்த திட்டமிட்டதாக போலீஸார் கூறுவது பொய். அவன் என்னைக் கடத்தியிருந்தால் அவனுக்கு எனது தோட்டத்து மண்தான் கிடைத்திருக்கும். எனது பெயரை இதில் இழுத்தது கண்டனத்துக்குரியது என்று ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை ரவி நேற்று இரவு ஓசூர் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
![]() |
இதுகுறித்து சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஜாங்கிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓசூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ வெங்கடசாமியைக் கடத்தி ரூ. 1.50 கோடி பணத்தைப் பறிக்க வெள்ளை ரவி திட்டமிட்டிருந்ததான் என்றார்.
ஆனால் இதை வெங்கடசாமி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், வெள்ளை ரவி என்னைக் கடத்திப் பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
அது உண்மையல்ல. எனது பெயரை தேவையில்லாமல் இதில் இழுத்துள்ளது வேதனை தருகிறது. எனக்கு எதிரிகளே கிடையாது. எதிரிகளையும் மதிக்கும் மனப் பக்குவம் கொண்டவன் நான்.
எனக்கு ஒரு தோட்டம் மட்டுமே உள்ளது. பணமும் கிடையாது. என்னை ரவி கடத்தியிருந்தாலும் கூட அவனுக்கு எனது தோட்டத்து மண் மட்டுமே கிடைத்திருக்கும்
![]() |
தேவையில்லாமல் இதில் என் பெயரை இழுத்த போலீஸார் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை. எனது கருத்துக்களை பேக்ஸ் மூலம் அவருக்கு அனுப்பியுள்ளேன் என்றார் வெங்கடசாமி.
சரியாக தமிழ் கூட பேசத் தெரியாத தமிழக எம்எல்ஏ வெங்கடசாமி என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் கூட தெலுங்கிலும், கன்னடத்திலும் பேசியிருக்கிறார்.
திட்டமிட்டு கொன்றனர்-ரவியின் அக்கா:
இதற்கிடையே தனது தம்பி ரவியை போலீஸார் திட்டமிட்டுக் கொன்று விட்டனர் என்று அவரது அக்காள் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், எனது தம்பி திருந்தி விட்டான். சமீப காலமாக அவன் ரவுடித் தொழிலையே விட்டு விட்டான். ஆனால் போலீஸார் அவனை நிம்மதியாக வாழ விடவில்லை. எப்படியாவது அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விடத் துடித்தனர்.
ஆனால் அது நிறைவேறவில்லை. இதையடுத்து கொலை செய்யத் திட்டமிட்டனர். சமாதானம் பேசலாம் வா என்று கூறி அழைத்து தீர்த்துக் கட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இந்த நிலையில்தான் செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மூலம் எனது தம்பியைப் பிடிக்கத் திட்டம் போட்டனர். அந்த வழக்கில் தற்போது தீர்த்துக் கட்டி விட்டனர்.
அந்த ராஜ்குமார் ஒரு தீவிரவாதி, அசாம் உல்பா தீவிரவாதிகளுடன் அவனுக்குத் தொடர்பு உள்ளது. அவனிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் முன்பு பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் அதுதொடர்பாக வழக்கு போடாமல் விட்டு விட்டனர் போலீஸார். இப்போது எனது தம்பியைக் கொன்று விட்டனர்.
நேற்று முன்தினம் எனது தம்பி ஓசூரில் லாட்ஜில் தங்கியிருந்தான். அதிகாலை 2 மணிக்கு போலீஸார் அங்கு சென்றனர். சமாதானமாக போய் விடலாம் என்று அவர்கள் அவனை அழைத்துள்ளனர்.
இது எங்களுக்குத் தெரிய வர , எங்கே ரவி என்று கேட்டோம். மாலை வரை நாங்கள் பிடிக்கவில்லை என்று மறுத்து வந்னர். இந் நிலையில்தான் மாலையில் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் தந்தனர்.
திட்டமிட்டு எனது தம்பியைத் தீர்த்துக் கட்டி விட்டனர். கடந்த ஆறு மாதங்களாக இரவு பகல் பாராமல் தொல்லை கொடுத்து வந்தது போலீஸ். எனது மகன்களையும் பிடித்துச் சென்று சித்திரவதை செய்தனர். எனது தம்பியை இப்படிக் கொன்றவர்களுக்கு கடவுள் சரியான தண்டனை கொடுப்பார் என்றார்.
கூட்டாளிகளையும் சுட்டுப் பிடிக்க முடிவு:
இதற்கிடையே என்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் கூட்டாளிகளை சுட்டுப் பிடிக்க தமிழக போலீஸ் முடிவு செய்துள்ளது.
தமிழக போலீசார் வைத்துள்ள ரெளடி லிஸ்ட்டில் வெள்ளை ரவி உட்பட அவனது கூட்டாளிகள் 18 பேர் இருந்தனர் இதில் ரவியுடன் என்கெளவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி குணாவின் பெயர் இல்லை.
அவன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவுடியாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதற்கிடையில் வெள்ளை ரவி கொல்லப்பட்டபோது டாடா சுமோவில் தப்பிச் சென்ற அவனது கூட்டாளிகளை பிடிப்பதற்காக தமிழக-கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து வெள்ளை ரவியின் கூட்டாளிகளையும் சுட்டுப் பிடிக்க தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர்.














Click it and Unblock the Notifications