டாடா சொல்லித்தான் வைகுண்டம் வந்தாரராம்:சொல்கிறார் மாஜி நைனார் நாகேந்திரன்!
சென்னை:டைடானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டாடா நிறுவனத்தின் ஆலோசனைப்படிதான் அக்கூட்டத்தில் வைகுண்டராஜன் கலந்து கொண்டார் என்று முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களை மறுத்து முதல்வர் கருணாநிதி நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் முன்னாள் அதிமுக தொழில்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் சட்டசபையில் பேசியதை மேற்கோள் காட்டி விளக்கியிருந்தார்.
மேலும் டாடா நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்ட விரோதமான டைட்டானியத்தை அள்ளி, திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்படும் வைகுண்டராஜன் ஏன் வந்தார் என்றும் கருண்நிதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரை தாதா என்று அன்போடு குறிப்பிடும் கருணாநிதி, இந்த தாதா ஜெயா டிவியின் பங்குதாரர் என்ற முறையில் அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கு வந்தாரா? என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
![]() |
இதற்கு ஜெயலலிதா அளித்த பதில் அறிக்கையில் மழுப்பல் தான் அதிகம் இருந்தது. வைகுண்டத்தைப் பற்றிய கேள்விக்கு ஜெயலலிதாவின் அறிக்கையில் சரியான பதில் இல்லை.
இந் நிலையில் மாஜி மந்திரி நைனார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி அக்கடிதத்தில் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிக்கான ஒப்பந்தம் குறித்தும் அதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் விவரம் குறித்தும், அந்த நிறுவனம் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கியிருந்தார்.
இதன் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கொண்டுள்ள அச்சங்கள் குறித்தும் விவரித்திருந்தார்.
மேலும் மக்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கும், டாடா நிறுவனம் தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், டாடா நிறுவனம் மட்டுமின்றி தற்போது அங்கு மைனிங் லீஸ் பெற்று தொழில் செய்து கொண்டிருப்பவர்களையும் அழைத்துப் பேசாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கியிருந்தார்.
இதன் அடிப்படையில்தான் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி தொழிற்துறை செயலாளர் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
அக்கூட்டத்தில் டாடா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே அப்போது அந்தப் பகுதியில் மைனிங் லீஸ் செய்து கொண்டிருந்தவர் என்ற முறையில் வைகுண்டராஜன் கலந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்.
டாடா நிறுவனம் நேரடியாக அவர்களுக்கு வேண்டிய நிலத்தை அங்குள்ள மக்களிடம் பேசி விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நில உரிமையாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அந்தத் தொழிற்சாலை வருவதால், பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும்.
அங்குள்ள நிலத்தை தொழிற்சாலை அமைப்பதற்கு கொடுக்க இருக்கும் கிராம விவசாயிகள், கிராமிய தொழிற் கலைஞர்கள் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு டாடா நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால் மேற்கூறிய கருத்துக்களை டாடா நிறுவனம் ஏற்க மறுத்தது. 29.7.2004 மற்றும் 31.3.2005 ஆகிய நாட்களில் சட்டசபையில், டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் குறித்து பேசப்பட்டது.
அதன் பின்னர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் கருத்துரையின்படி மக்களிடம் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்று தெரிந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் முக்கியம் என்றும் இந்தத் தொழிற்சாலை வரவினால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில், ஜெயலலிதாவால் அந்தத் திட்டம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் நாகேந்திரன்.
ஆனால், அந்த டாடாவிடம் வைகுண்டத்துக்கு 1,000 ஏக்கர் தர வேண்டும் என ஜெயலலிதா பேரம் பேசியதாக கருணாநிதி குறிப்பிட்டிருப்பது நினைவுகூறத்தக்கது.













Click it and Unblock the Notifications