ஆடிப் பெருக்கு- காவிரியில் மக்கள் வெள்ளம்
திருச்சி:இன்று ஆடிப் பெருக்கு (ஆடி 18) கொண்டாடப்படுவதையொட்டி காவிரிக் கரையோரப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.
இதனால் திருச்சி, ஒகேனக்கல், மேட்டூர் ஆகிய காவிரிக் கரையோரப் பதிகளில் உற்சாகம் கரைபுரள்கிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் இந்த தினத்தில் காவிரியில் நீராடினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒகேனக்கல்லில் உள்ள தேசநாதீஸ்வரர் கோவிலுலும் காவேரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகின்றன.
மேட்டூரில் காவிரிப் பாலம், முனியப்பன் கோவில் அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினர்.
ஈரோட்டை அடுத்துள்ள பவானி கூடுதுறையிலும் (இது காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடம்) ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர்.
திருச்சியில் கல்லனை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நீராடி சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர்.
மேலும் காவிரியின் துணை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு ஆகியவற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர்.
அதிகாலை முதலே மக்கள் இங்கு நீராட ஆரம்பித்துவிட்டனர். இந்த ஆண்டு காவிரியில் நீர் அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தப் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications