கருத்து கந்தசாமிகள்: டாடா ஆலை குறித்துநானும் கருத்து கேட்பேன்-ராமதாஸ்
திண்டிவனம்:டாடா தொழிற்சாலை அமைவது குறித்து நானும் மக்களிடம் கருத்து கேட்டு முதல்வருக்கு அறிக்கையாக அனுப்புவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க சரத்குமார், திமுக ஆகியவை குழுக்களை அமைத்துள்ள நிலையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் டைட்டானியம் தொழிற்சாலையை அமைக்க அனுமதி பெற்றிருந்தது. இது தொடர்பாக ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் நன்றாக அறிக்கை போர் நடத்தி வருகின்றன.
எந்தவொரு திட்டம் கொண்டு வந்தாலும், அது குறித்து மக்களிடம் கருத்து கேட்பது மிக அவசியம். இந்த திட்டத்தின் மூலம் ஓராயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எத்தனை ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து செயல்படுத்த வேண்டும்.
இந்த தொழிற்சாலை அமையவிருப்பது புதிய திட்டம் அல்ல. கடந்த 1997ம் ஆண்டிலிருந்து செயல்படுத்த அப்போது ஆண்ட கட்சிகள் முனைந்துவந்தன. இந்த திட்டத்தை எதிர்த்து பாமக சார்பில் நெல்லையில் பேரணி நடத்தி அந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இந்நிலையில் 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. காரணம், இந்தப்பகுதியில் கனிம வளங்கள் அதிளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரசின் செல்வாக்கை சிலர் (வைகுண்டராஜன்) தவறாக பயன்படுத்தி, மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் நடந்துள்ளனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை ஏன் மத்திய, மாநில அரசுகள் ஏற்று நடத்தக்கூடாது. தனியார் நிறுவனங்கள் வருவதை மக்கள் விரும்பாத நிலையில் அரசாங்கம் ஏற்று நடத்துவதே உகந்தது.
இதைப்பற்றி சாத்தான்குளம், ராதாபுரம் மக்களிடம் கருத்து கேட்பதற்காக வரும் ஆகஸ்ட் 6ம் தேதி மக்களை நேரில் சந்திக்க இருக்கிறேன். அவர்களிடம் கேட்ட கருத்தை அறிக்கையாக தயார் செய்து முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு அனுப்புவேன்.
மாவட்டம் பிரித்தல்:
பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் என்ற புதிய மாவட்டத்தை ஏற்படுத்த போவதாக கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்தும் முதல்வருக்கும் கடிதம் எழுத உள்ளேன் என அறிக்கையில் கூறியுள்ளார் ராமதாஸ்.
மணல் கடத்தலை கண்டித்து பேராட்டம்:
இதற்கிடையே பாமக தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
வரும் 6ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் சாத்தான்குளம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதி மக்களை சந்தித்து டாடாவின் டைட்டானியம் ஆலை குறித்து கருத்து கேட்க உள்ளது.
இங்கு பெறப்படும் மக்கள் கருத்துக்களை அறிக்கையாக முதல்வரிடம் சமர்பிப்போம். மேலும் தாமிரபரணி நதியினை காப்பாற்ற நெல்லையில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி மாபெரும் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
7-ந் தேதி நடக்கும் இந்த போராட்டம் எங்கு வைத்து நடக்கும் என்பதை பின்னர் அறிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications