ரயில்களில் இனி ஸ்டார் சாப்பாடு!
டெல்லி:நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவு வகைகளை ரயில்களில் அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் அரசு பேருந்துகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ரயில்களுக்கு பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகளுக்கான கட்டணங்களைக் குறைத்தும், பல்வேறு சலுகைகள், வசதிகளைக் கொடுத்தும் ரயில் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது ரயில்வே.
இந்த நிலையில், பயணிகளுக்கான உணவில் தற்போது தீவிர கவனம் செலுத்த ரயில்வே தீர்மானித்துள்ளது. தற்போது முதல் வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர்க்கு ரயில்வே வழங்கும் உணவு குறித்து நிறைய புகார்கள். தரமற்றவையாக அவை உள்ளதாக பயணிகள் குறை கூறி வருகின்றனர்.
இதனால் முதல்வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி பயணிகளின் பாராட்டைப் பெற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தற்போது விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் கொடுக்கப்படும் உணவு வகைகளை கொடுக்கின்றனர். அதேபோல, முதல் வகுப்பு, ஏசி வசதி, ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணம் செய்வோருக்கு இதே தரத்திலான உணவை தர ரயில்வே முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக ராஜதானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது அமல்படுத்தப்படும். ரயில்வே துறை நடத்தும் விடுதிகளின் தரத்தை உயர்த்தி, அவை அனைத்தும் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
பயணிகளுக்கு கார் வசதி, ஹோட்டல் வசதிகளை ரயில்வே நிர்வாகம் கால் சென்டர்கள் மூலம் ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தினையும் கொண்டு வரவுள்ளது.
முக்கிய தடத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து நிறுத்தத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி-சென்னை, டெல்லி-கொல்கத்தா, டெல்லி-மும்பை ரயில்களின் வேகம் முதற்கட்டமாக அதிகரிக்கப்படவிருப்பதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications