நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்
சென்னைகொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவிலிருந்து தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். ஆனால் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கழிப்பறை ஏன் மூடப்பட்டுள்ளது என்று பயணிகள் கேட்டதற்கு விமான ஊழியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அத்தனை பயணிகளும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விமானம் சென்னைக்கு வந்து சேர்ந்ததும், விமான ஊழியர்கள், ஒரு பயணியை ரகளை செய்ததாக கூறி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
இதைப் பார்த்ததும் மற்ற பயணிகள் திரண்டு வந்து மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர். கழிப்பறைக் கதவு ஏன் மூடப்பட்டிருந்தது என்று கேட்பது குற்றமா, அதற்காக தண்டனையா என்று ஆவேசமாக கேட்டபடி மேலாளரை முற்றுகையிட்டு கோபத்துடன் பேசினர்.
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அத்தனை பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் வருத்தம் கேட்டனர். இதுபோல இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications