கோவை-இன்று தண்டனை அறிவிப்பு!தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் நிலை
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 153 பேருக்கும் இன்று முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதையொட்டி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 1ம் தேதி கோவை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதையொட்டி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், வணிக பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகளையும், ஜாமீனில் உள்ள தீவிரவாதிகளையும் உளவு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், பொட்டல்புதூர், கடையநல்லூர், தென்காசி, வடகரை, செங்கோட்டை ஆகிய ஊர்களில் சாதாரண உடைகளில் பல பகுதிகளில் உள்ள போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல ஊர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தென்காசி-புளியரை சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெறுகிறது. பல ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் குவியும் குற்றாலத்திலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications