பெட்ரோல், டீசல், காஸ் விலை கிடு கிடு உயர்வு?
டெல்லி:எண்ணை நிறுவனங்களின் நெருக்குதல் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை கணிசமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பது எண்ணை நிறுவனங்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.
சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என மத்திய அரசை எண்ணை நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
கடந்த வாரம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் சர்தாக் பெஹூரியா எண்ணை நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டம் குறித்துக் கூறுகையில்,
தற்போது உள்ள விலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையால் 5.88 ரூபாயும், டீசலால் லிட்டருக்கு 4.80 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
மண்ணெண்ணையால் லிட்டருக்கு 14.63 ரூபாயும், ஒரு காஸ் சிலிண்டர் விற்பனையால் 189.14 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி தினமும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 90 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் சந்தித்துள்ள நஷ்டம் ரூ. 4,879 கோடியாகும்.
இதையடுத்து கண்டிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறையை எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையிடம், விலை உயர்வு கோரி பெட்ரோலியத் துறை அணுகியது. விலையை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது.
அதன்படி பெட்ரோல், டீசல் மட்டுமல்லாது மண்ணெண்ணை, காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுதவிர நடப்பு நிதியாண்டில் ரூ. 19,000 கோடி மதிப்பிலான எண்ணெய் பங்குகளை வெளியிடவும் நிதியமைச்சகத்திடம் பெட்ரோலியத் துறை அனுமதி கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications