சிறையில் சஞ்சய் தத் - சோகத்தில் 2 கிராமங்கள்
அகமதாபாத்:நடிகர் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் குஜராத் மாநிலத்தில் உள்ள இரு கிராம மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தங்களது கிராமங்களில் 2 மாதங்களுக்கு எந்த விசேஷமும் நடக்காது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், ஏ.கே.56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்திற்காக 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் சஞ்சய் தத். தற்போது புனே அருகில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், குஜராத் மாநிலத்தில் உள்ள காசிபுரா மற்றும் சரல் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். காரணம், இந்தக் கிராமங்களுக்கும், தத் குடும்பத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்புதான்.
![]() |
1957ம் ஆண்டு வெளியான மதர் இந்தியா படத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் இறுதி வரை சென்ற முதல் இந்தியப் படம் மதர் இந்தியா.
இப்படத்தில் சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத்தும், தாயார் நர்கீஸும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தின் சில காட்சிகளை காசிபுரா, சரல் கிராமங்களில் படம் பிடித்தனர். இங்கு முகாமிட்டிருந்தபோதுதான் சுனில் தத்துக்கும், நர்கீஸுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் கல்யாணத்தில் முடிந்தது.
தங்களது இல்லற வாழ்க்கை தொடங்க அஸ்திவாரம் போட்ட கிராமங்கள் என்பதால் இந்தக் கிராமங்கள் மீது சுனில்தத், நர்கீஸுக்கு தனிப் பாசம் உண்டு. அது தத் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இருந்தது. இந்த கிராம மக்களும் தத் குடும்பத்தினரை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பாசம் காட்டி வருகின்றனர்.
சஞ்சய் தத் முதல் முறையாக கைதாகி சிறைக்குச் சென்றபோதும், போதைப் பொருளுக்கு அடிமையாகி இருளில் இருந்தபோதும் இந்தக் கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர்.
இந்த நிலையில் தற்போது சஞ்சய் தத் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளதால் இக்கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.
இதுகுறித்து காசிபுரா கிராமத் தலைவர் எச். பாட்டீல் கூறுகையில், எங்களால் சாப்பிட முடியவில்லை, தூங்கக் கூட முடியவில்லை.
எங்களது அன்பு மகன் சஞ்சய் தத். அவர் மீண்டும் சிறைக்குப் போயுள்ளது வருத்தமாக உள்ளது. அவர் விரைவில் விடுதலையாக வேண்டும்.
இன்னும் 2 மாதங்களுக்கு எங்களது குடும்பங்களில் எந்த விசேஷத்தையும் நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். கோவில் திருவிழாக்களையும் கூட தள்ளி வைத்து விட்டோம் என்றார்.













Click it and Unblock the Notifications