சென்னையில் ரயில் மறியல் செய்த பயணிகள் கைது
சென்னை:ரயில்கள் கால தாமதமாக வருவதைக் கண்டித்து சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பயணிகளை ரயில்வே போலீஸார் திடீரென கைது செய்தனர்.
சமீபத்தில் திருவள்ளூர், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில்கள் தொடர்ந்து தாமதாமாக வருவதைக் கண்டித்தும், ரயில் நேரங்களை மாற்றியமைத்ததைக் கண்டித்தும் இந்தப் போராட்டங்கள் நடந்தன.
இதற்கு முத்தாய்ப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 நாட்களாக அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரண்டதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைக் கண்டித்தும் பயணிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கோபமடைந்த ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, பயணிகள் ரயில்களை மறிக்கக் கூடாது. மீறிச் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இந் நிலையில் இன்று காலை பல்லாவரம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தனர். ஆனால் உரிய நேரத்தில் மின்சார ரயில் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பயணிகளை ரயில்வே போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications