பங்காளிச் சண்டையில் ஊர்க் கிணற்றில்விஷம், பல்லிகளை கலந்தவர் கைது
ராமநாதபுரம்:தனது பிரச்சினையில் உதவ முன்வராத ஊர் மக்களை பழிவாங்குவதற்காக கோவில் கிணற்றில் பல்லிகளையும், விஷத்தையும் கலந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அரியக்கோட்டை அருகே உள்ளது அனிச்சகுடி கிராமம். இக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே பொதுக் கிணறு உள்ளது.
நேற்று பெண்கள், கிணற்றில் தண்ணீர் எடுத்தபோது வாளியில் இறந்து போன பல்லிகள் வந்துள்ளன. மேலும் தண்ணீரும் ஒரு வித வாசனையுடன் இருந்தது.
இதனால் தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். வருவாய்த் துறையினரும் வந்தனர்.
சோதனையில் கிணற்றில் விஷம் கலந்திருந்தது உறுதியானது.
இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. பின்னர் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில், கிணற்றில் பல்லிகளைப் போட்டும், விஷத்தைக் கலந்தும் ஊர் மக்களைக் கொல்லப் பார்த்தது அதே ஊரைச் சேர்ந்த மலைராஜ் என்பது தெரிய வந்தது.
ஆனால் மலைராஜ் ஊரில் இல்லை. நயினார்கோவில் அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில் உள்ள தனது மனைவி வீட்டில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
கிணற்றில் விஷம் கலந்ததை ஒப்புக் கொண்ட மலைராஜ் கூறுகையில்,
காளியம்மன் கோவிலுக்குப் பூஜை செய்யும் வேளார் சமூகத்தைச் சேர்ந்தவன் நான். கோவிலுக்குப் பூஜை செய்யும் 15 குடும்பத்தினரும் கோவிலுக்கு அருகிலேயே வசித்து வருகிறோம்.
எனது தந்தை செல்வத்திற்கு 2 மனைவிகள். நான் முதல் மனைவிக்குப் பிறந்தவன். இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் செந்தில், உடையான் ஆகியோர்.
நான் 8 வருடங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் வேலை பார்த்தேதன். அங்கு நான்கு வருடங்கள் வேலை பார்த்த நான் எனது மனைவிக்கு ரூ. ஐந்தரை லட்சம் பணமும், 25 பவுன் நகையையும் அனுப்பி வைத்திருந்தேன்.
நான் செளதியில் இருந்தபோது செந்திலும், உடையானும் எனது மனைவியிடம் வந்து நகை, பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இப்படியாக நான் அனுப்பிய பணம் மற்றும் 25 பவுன் நகைகளையும் ஏமாற்றி வாங்கி விட்டனர். அது மட்டும் இல்லாமல், எனது மனைவிக்கு அவரது பெற்றோர் போட்ட 5 பவுன் நகையையும் கூட ஏமாற்றி வாங்கி விட்டனர்.
நான் ஊர் திரும்பியதும் அதை திருப்பிக் கேட்டபோது தர மறுத்து விட்டனர். மேலும் என்னையும் அடித்து விட்டனர். இதையடுத்து நான் போலீஸில் புகார் கொடுத்தேன்.
நான் போலீஸில் புகார் கொடுத்ததால் எனது சமூகத்தினர் கோபமடைந்தனர். என்னைத் திட்டினர். எங்களிடம் சொல்லியிருந்தால் பணத்தையும், நகையையும் வாங்கிக் கொடுத்திருப்போமே என்று கூறினர்.
ஆனால் அவர்கள் சொல்லியும் கூட செந்திலும், உடையானும், நகை பணத்தைத் திருப்பித் தரவில்லை.
இதையடுத்து எனக்கு உதவாததோடு மட்டுமல்லாமல், என்னைத் திட்டவும் செய்த எனது சமூகத்தினரையும், ஊர் மக்களையும் கொல்லத் திட்டமிட்டேன்.
தேவிப்பட்டணத்தில் நான் வேலை பார்த்து வந்த செங்கல் சூளையில் திரிந்த பல்லிகளைப் பிடித்தேன். பிறகு ராமநாதபுரம் போய் அங்குள்ள ஒரு பூச்சி மருந்துக் கடையில் மருந்தை வாங்கினேன்.
பிறகு இரண்டையும் கிணற்றில் கலந்து விட்டு மனைவியின் ஊருக்கு வந்து விட்டேன் என்றார் மலைராஜ்.
அவரைக் கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பங்காளிச் சண்டையில் ஊரையேக் கொல்லப் பார்த்த மலைராஜின் செயல் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications