இந்தியாவை தாக்குவோம்: அல்-கொய்தா எச்சரிக்கை
வாஷிங்டன்:இந்தியா உள்ளிட்ட அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என அல்-கொய்தா அமைப்பு எச்சரித்துள்ளது.
இப்போது தான் இந்தியாவை இந்த அமைப்பு நேரடியாக மிரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அல் கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடன் எங்கிருக்கிறார், உயிருடன் தான் இருக்கிறாரா என்பது பெரும் குழப்பமாக உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக அல் கொய்தா அமைப்பின் புதிய வீடியோக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், புதிதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் அமெரிக்காவைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதியான ஆடம் கடாஹன் என்பவர் பேசியுள்ளார்.
அதில், ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அட்டூழியம் செய்து வரும் அமெரிக்காவை ஆடம் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும், இந்தியாவும் இதில் தப்பாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த வீடியோவின் பின்னணியில் கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமெரிக்க வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் கிராபிக்ஸ் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் புஷ் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த இந்தத் தாக்குதலில் அமெரிக்க தூதரக அதிகாரி டேவிட் ஃபாய் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வீடியோவில் கராச்சி தாக்குதல் சம்பவத்தில் பங்கெடுத்த தீவிரவாதியும் பேசியுள்ளார். மேலும் 1998ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான குண்டுவெடிப்பு, நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் ஆகியவை குறித்தும் விரிவாக பேசியுள்ளனர்.
ஆடம் கடாஹனின் பேச்சியில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
உங்களை நாங்கள் தொடர்ந்து குறி வைத்துத் தாக்குவோம். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், உங்களது இருப்பிடங்கள் எங்களால் குறி வைக்கப்படும். நீங்கள் எங்களைத் தாக்குவது போல நாங்கள் உங்களைத் தாக்குவோம்.
ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் நிர்மூலமாக்கும் உங்களது உளவாளிகள், ராணுவம் உள்ளிட்டவற்றைத் தாண்டி எங்களது தாக்குதல் கரங்கள் உங்களை இறுக்கி அழிக்கும்.
எங்களது சட்டங்களை நீங்கள் மதிப்பதை விட உங்களது சர்வதேச சட்டங்களை நாங்கள் மிகவும் கீழாக மதிக்கிறோம்.
முஸ்லீம்களை அழிக்கும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் அந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் எங்களது தாக்குதலிலிருந்து தப்ப முடியாது.
அரபு நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களும், அமெரிக்க தூதரகங்களும் எங்களின் முக்கிய இலக்குகள் ஆகும்.
அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவு நாடாக மாறியுள்ளது. எனவே இந்தியாவையும் நாங்கள் தாக்குவோம். காஷ்மீரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்களை அமெரிக்க ஆதரவுடன் இந்தியா கொன்று குவித்துள்ளது.
இதுபோல ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளும் அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளன. எனவே மாஸ்கோ, லண்டன், டெல் அவிவ், டெல்லி ஆகிய நகரங்களில் எங்களது தாக்குதல் நடத்தப்படும்.
இந்த தாக்குதல்களிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமானால், முஸ்லீம் நாடுகளில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஆடம்.
ஆடம் பிறப்பால் ஒரு அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆடம், இஸ்லாமுக்கு மாறினார். பின்னர் அவர் அல்கொய்தா அமைப்பில் இணைந்தார். தற்போது அவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அல் கொய்தா அமைப்பின் சார்பில் பலமுறை வீடியோ மூலம் செய்திகளை வெளியிட்டுள்ளார் ஆடம். மே மாதம் வெளியிட்ட செய்தியில், நியூயார்க் இரட்டை கோபு தாக்குதலை விட மிகப் பயங்கரமான தாக்குதல்களை அமெரிக்கா சந்திக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோ கேசட்டில் பச்சை மற்றும் சிவப்பு நிற தலைப்பாகையை அவர் அணிந்திருந்தார். ஆங்கிலத்தில் பேசியுள்ளார். அதன் அரபி மொழியாக்கமும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
ஆடமின் பின்னணியில் அல் கொய்தா அமைப்பின் இரண்டாம் கட்டத் தலைவராக கருதப்படும் அய்மான் அல் ஜவாஹிரியின் படம் உள்ளது.
அல் கொய்தாவின் இந்த புதிய சவாலை சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அல் கொய்தாவின முதல் நேரடி மிரட்டல் குறித்து இந்தியாவும் கவலையடைந்துள்ளது.
இது குறித்து உயர் மட்ட பாதுகாப்புத்துறை, உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் நாராயணன் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications