மணல் கொள்ளையர்களை வேவு பார்த்தபாமக பெண் எம்எல்ஏக்கள்!!
நெல்லை:தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் கொள்ளையர்களைக் கையும், களவுமாகப் பிடிக்க தனது கட்சி பெண் எம்.எல்.ஏக்களை காண்டிராக்டர்கள் போல அனுப்பி மணல் கொள்ளை குறித்த விவரத்தை சேகரித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இத்தகவலை அவரே இன்று வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுகிறது.
இந்த மண் பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கே கடத்தப்பட்டு வருகிறது.
இந்த மணல் கடத்தலைக் கண்டித்து கடந்த போராட்டம் நடத்துவேன் என ராமதாஸ் அறிவித்ததையடுத்து தமிழமெங்கும் காவல்துறையினர் சோதனை நடத்தி 150க்கும் மேற்பட்ட லாரிகளை பறிமுதல் செய்தனர்.
ஆனால், அடுத்த நாளே இச்சோதனையின் வேகம் குறைந்தது. இதனால் மணல் கொள்ளை வழக்கம் போல் நடந்து வருகிறது.
இந் நிலையில் இன்று திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மணல் கடத்தலை கண்டித்து பாமக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வேவு பார்த்த பாமக எம்எல்ஏக்கள்:
ஆர்பாட்டத்தில் பேசிய ராமதாஸ், மணல் கொள்ளை குறித்து விலாவாரியாக விவரித்தார்.
மணல் கொள்ளையர்களின் செயல்பாடுகளை தனது கட்சி பெண் எம்.எல்.ஏக்கள் மூலம் கண்டறிந்து, அவற்றை வீடியோவில் பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய பா.ம.க எம்.எல்.ஏக்கள் தமிழரசி, காவேரி ஆகியோர் ரகசியமாக கான்ட்ராக்டர்கள் போல தாமிரபரணி, வைப்பாறு, உள்ளிட்ட மணல் குவாரி பகுதிகளுக்கு சென்றனர்.
அங்கு அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக இயந்திரங்களை வைத்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
இந்த ஆதாரங்களை அரசுக்கு அனுப்பி வைப்போம். மேலும் மணல் கொள்ளை தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.
இனிமேலும் மணல் கொள்ளை தொடர்ந்தால் நேரடியாக சென்று மணல் கொள்ளையை தடுப்போம், குவாரிகளுக்குள் பாமகவினர் புகுந்து போராடுவார்கள் என்றார்.
தமிழகம் முழுவதும் மணலை கொள்ளையடிப்பதில் ஆளும் திமுக, எதிர்க் கட்சியான அதிமுக ஆகியோரிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications