டாடா பை பை: நாளை கேப்டன் வருகை!
திருநெல்வேலி:டாடாவின் டைட்டானியம் திட்டம் தொடர்பாக பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை நெல்லை வருகிறார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைப்பதற்காக தமிழக அரசுடன் டாடா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
டாடா நிறுவன தொழிற்சாலை அமைப்பதற்கு அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சம்பந்தப்பட்ட ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மக்களிடம் கருத்து கேட்டறிந்து தொழிற்சாலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மேலும் இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் ஒரு குழுவையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து உண்மை கண்டறியும் குழுவை நடிகர் சரத்குமார் அனுப்பினார். இந்தக் குழுவினர் நெல்லை, தூத்துக்குடி பொது மக்களிடம் கருத்து கேட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
டாடா நிறுவனத்தை எதிர்த்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் ராதாபுரம், சாத்தான்குளம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களிடம் கருத்து கேட்டார்.
காங்கிரசும் (பல்வேறு கோஷ்டிகளைக் கொண்ட) குழு அமைத்து மக்களிடம் கருத்து கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முகாமிட உள்ளனர்.
இந் நிலையில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தும் டாடா விவகாரத்தில் களமிறங்கியுள்ளர். இது தொடர்பாக பொது மக்கள் கருத்தை அறிவதற்காக நாளை அவர் நெல்லை வருகிறார்.
காலை 9 மணிக்கு அவர் இந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார். டாடா நிறுவனத் தொழிற்சாலையால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். பொதுமக்களை சந்தித்து கருத்தும் கேட்கிறார்.
இப்படி பல்வேறு கட்சியினரும் பல்வேறு கணக்குகளுடன் கருத்து கேட்பு என்ற பெயரில் இம்மாவட்டங்களை முகாமிட்டுக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் ஓட்டு வங்கிதான்.
இப்பகுதி மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக நான் முந்தி, நீ முந்தி என்று இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டுள்ளன.
தொழில் வளர்ச்சியே இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் முதல் முறையாக வரப் போகும் மிகப் பெரிய தனியார் தொழிற்சாலை டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலைதான்.
இந் நிலையில், இந்த தொழிற்சாலைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டியிருப்பதால் டாடா இந்தப் பகுதிக்கு டாடா காட்ட நிறைய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications