தாவூத் நல்லாருக்கார்- கூறுகிறார் சம்பந்தி மியான்டட்!
டெல்லி:தாவூத் இப்ராகிம் எங்கிருக்கிறாரோ, அங்கு நலமாக இருக்கிறார் என்று அவரது சம்பந்தியான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்டட் கூறியுள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் மூளையாக கருதப்படுபவர் தாவூத் இப்ராகிம். இதை நடத்தியவர் டைகர் மேமன். தாவூத்தின் வலதுகரமாக செயல்படுபவர் சோட்டா ஷகீல்.
இந்தியாவால் தேடப்பட்டு வரும் மூன்று பேரும் படு பத்திரமாக பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். ஆனால் இதை பாகிஸ்தான் ஒருபோதும் ஒத்துக் கொண்டதில்லை.
இந் நிலையில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள க்வெட்டா நகரில் வசித்து வந்த இவர்களை பாகிஸ்தான் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. தனது கட்டுப்பாட்டில் அடைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
அதேசமயம், இன்னொரு செய்தி வேறு கதையைக் கூறியது. அதாவது, கராச்சி நகரில் உள்ள ரிஜென்ட் கிரவுன் பிளாசா ஹோட்டலில் பிளாக் பிரின்ஸ், பிரோஸ் தெளசா, பிரோஸ் கிட்டா ஆகிய சூதாட்டக்காரர்களுக்கும், தாவூதுக்கும் சூதாட்டத்தின்போது தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த மற்ற மூன்று பேரும் சேர்ந்து தாவூதை துப்பாக்கியால் சுட்டனர். அதில் தாவூதின் இடது கால் பலத்த சேதமடைந்துள்ளதாக அந்த செய்தி கூறியது.
இந்திய உளவுப் பிரிவு முதல் செய்தியை மறுத்தது. ஆனால் இரண்டாவது செய்தியை உறுதிப்படுத்தியது.
இந் நிலையில் தாவூத் இப்ராகிமின் சம்பந்தியான முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மியான்டட், தாவூத் இப்ராகிம் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அவர் எங்கிருக்கிறாரோ, அங்கு நலமாக இருக்கிறார் என்றார்.
தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, அவர் இங்கு இல்லை, ஆனால் எங்கு வசிக்கிறாரோ அங்கு நலமுடன் இருக்கிறார் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் என்றார் மியான்டட்.
இதே கருத்தையே பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் இக்பால் சீமாவும் கூறியுள்ளார். தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என்றார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தாவூத் இப்ராகிம் ஒரு இந்தியர். ஐ.நா. சபை வழங்கிய குற்றவாளிகள் பட்டியலில் அப்படித்தான் கூறப்பட்டுள்ளது.
எனவே அவர் எங்கிருக்கிறார் என்பதை இந்தியாவில்தான் போய் தேட வேண்டும் என்று கூறியுள்ளர்.
இந்தியாவைப் போலவே தற்போது அமெரிக்காவும் தாவூத்தை குறி வைக்க ஆரம்பித்துள்ளது. அல் கொய்தா அமைப்புக்கு தாவூத் உதவுவதாகவும், போதைப் பொருள் கும்பலுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்காவின் நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்தே தாவூத்தை பாகிஸ்தான் ஐஎஸ்ஐ பத்திரமான இடத்திற்குக் கொண்டு போய் விட்டதாக தற்ேபாது சந்தேகிக்கப்படுகிறது.