பேய்க்குப் பயந்து திருடர்களிடம் ஏமாந்த பொதுஜனம்!
திருச்சி:பேய்க்குப் பயந்து வீட்டைப் பூட்டி விட்டு போனவரின் வீட்டில் புகுந்து, நகை, பணத்தை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
திருச்சி மாவட்டம் த.பேட்டை நெசவாளர் காலனி பகுதியில் நள்ளிரவில் பேய் நடமாட்டம் இருப்பதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டனர். நள்ளிரவில் பேய் கதவை தட்டி தண்ணீர் கேட்பதாக சிலர் புரளியை கிளப்பியதால் பெண்கள் தனியாக வீட்டில் படுத்து தூங்க அச்சப்படுகின்றனர்
அந்தப் பகுதியில் வசித்து வருபவர் பன்னீர். இவரது மனைவி நளினி. பேய் பீதியால், நளினி இரவில் படுத்துத் தூங்க அஞ்சினார். இந்த நிலையில் பன்னீர் வேலை நிமித்தம் வெளியூர் போயிருந்தார்.
இதனால் இரவில் வீட்டில் படுக்க அஞ்சிய நளினி, அடுத்த தெருவில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு குழந்தைகளுடன் போய்த் தூங்கினார்.
இதை அறிந்த சில திருடர்கள் பன்னீர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்று விட்டனர்.