போர் விமானங்கள் வாங்கியதில்ராஜபக்சே தம்பி பல கோடி ஊழல்
கொழும்பு:இலங்கை விமானப்படைக்கு போர் விமானங்கள் வாங்கியதில், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதபயா ராஜபக்சே பெருமளவு ஊழல் புரிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளராக இருப்பவர் ராஜபக்சேவின் தம்பி கோதபயா ராஜபக்சே. கடந்த ஆண்டு மிக் 27 ரக போர் விமானங்களை இலங்கை பாதுகாப்புத் துறை வாங்கியது.
அதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக் 27 போர் விமானங்களை இந்தியா, கஜகஸ்தான் தவிர எந்த நாடும் பயன்படுத்துவது கிடையாது. இந்த விமானங்கள் காலாவதியாகி விட்டன. எனவே சர்வதேச சந்தையில் விற்கப்படாமல் இருந்தன.
கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்த விமானங்களை பிற நாடுகள் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தப்படாமல் இருந்த விமானங்களைத்தான் கூடுதல் விலை கொடுத்து தேவையில்லாமல் இலங்கை அரசு வாங்கியுள்ளது.
இதில் கோதபயா ராஜபக்சே பெருமளவு ஊழல் புரிந்துள்ளார். கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார்.
இதுத்தவிர தற்போது உபயோகித்து வரும் கே-பிர் ரக விமானங்களை நவீனப்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, உபயோகமே இல்லாத மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியுள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.