2 முறை விசாரணை அறிக்கை: உதவி கமிஷ்னர்மீது செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கு!
சென்னை:டாக்டர் பிரகாஷ் மீதான செக்ஸ் மோசடி வழக்கில் இரண்டு முறை இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்த காவல்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் மீது பிரகாஷ் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவையேக் கலக்கியவர் டாக்டர் பிரகாஷ். மருத்துவத் தொழிலை விட்டு விட்டு மாமா தொழிலில் இறங்கிய அவர், இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவற்றை இன்டர்நெட் மூலமாகவும், சிடிக்கள் மூலமாகவும் புழக்கத்தில் விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் பிரகாஷ், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
டாக்டர் பிரகாஷ் வழக்கை விசாரித்த உதவி ஆணையர் ராஜேந்திரன் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி இறுதி விசாரணை அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் நான்கு மாதங்கள் கழித்து இன்னொரு விசாரணை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். இதையடுத்து டாக்டர் பிரகாஷ் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், இருமுறை இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது. உதவி ஆணையர் ராஜேந்திரன் இருமுறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது சட்டத்திற்கும் புறம்பானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி கே.என்.பாட்ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிரகாஷ் சார்பில் பிரபல வழக்கறிஞர் கருப்பன் ஆஜரானார். அப்போது காவல்துறை சார்பில் இறுதி விசாரணை அறிக்கையை இருமுறை தாக்கல் செய்தது தொடர்பாக விளக்கம் தரப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பாட்ஷா வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications