பிற்படுத்தப்பட்டோருக்கான 27 இட ஒதுக்கீடு:தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த சட்டத்தை அமல்படுத்த கடந்த மார்ச் 29ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கின் பிரதான மனு மீதான விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரை இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்றும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விரைவில் பிரதான மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பெஞ்ச் அறிவித்தது.
முன்னதாக இந்த மனு மீதான நேற்று நடந்த விசாரணையின்போபாது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாகனாவதி வாதிடுகையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விரும்பினால் அதே போல செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.
ஆனால் மத்திய அரசின் இந்த கோரிக்கையை மனுதாரர்கள் தரப்பு எதிர்த்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த முறையான ஆய்வு இல்லாமல், வகைப்பாடு இல்லாமல் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே இதை அனுமதிக்கவே கூடாது என்று அவர்கள் தரப்பு வக்கீல் வாதாடினார்.
இதையடுத்து பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் அரிசித் பச்சாயத், சி.கே.தாக்கர், ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர், இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கோரும் மத்திய அரசு அது தொடர்பாக என்ன புதிய காரணத்தை வைத்துள்ளது? இப்போது என்ன சூழல் மாறியுள்ளது?, எந்த புதிய அம்சத்தை வைத்து வாதிடுகிறீர்கள்? என்று சரமாரியாக கேட்டனர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல், சமீபத்தில் தமிழத்தில் அமல்படுத்தப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டினர்.
அதில், 65 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தலாம். அதேசமயம், பொதுப் பிரிவில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை மத்திய அரசு வக்கீல் சுட்டிக் காட்டினார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அது அசாதாரணமான வழக்கு. அந்த வழக்கில் 14 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அது நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் மத்திய அரசு தற்போது வைத்துள்ள அனைத்து வாதங்களும் ஏற்கனவே கூறப்பட்டவைதான், அதில் புதிதாக ஒன்றும் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications