டாடா- 9 பேர் கொண்ட குழு அமைத்தார் ஜெயலலிதா
சென்னை:டாடா தொழிற்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க அதிமுக சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்,
டாடா நிறுவனம் அமைக்கவிருக்கும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. (ஜெயலலிதாவின் ராசி எண் 9 ஆகும்)
இந்தக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பி.எச்.பாண்டியன், என்.தளவாய் சுந்தரம், நயினார் நாகேந்திரன், சொ.கருப்பசாமி, அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், பி.செந்தூர் பாண்டியன், பாப்புலர் வி.முத்தையா ஆகியோர் இடம் பெறுவர்.
இந்தக் குழு நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் மற்றும் பொது மக்களை நேரடியாக சந்தித்து, கருத்துக்களை கேட்டு அதற்குரிய அனைத்து விவரங்களையும் கழக பொது செயலாளராகிய என்னிடம் அறிக்கையாக கொடுக்கும்.
எங்கள் குழு கொடுத்த அறிக்கையில், மக்கள் தெரிவித்த கருத்துக்களை நான் பத்திரிக்கை வாயிலாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பேன் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications