ராமதாஸ் பேரன் ... குற்றாலத்தில் சலசலப்பு!
தென்காசி:பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பேரன் என்று கூறிக் கொண்ட ஒருவர், குற்றாலம் ஐந்தருவியில் தான் குளிக்கும்போது பிறரை அனுமதிக்கக் கூடாது என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை போலீஸார் ஏற்க மறுத்து மக்களோடு மக்களாக குளிக்க வைத்தனர்.
குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று ஆடி அமாவாசை என்பதால் அருவிகளில் கூடுதல் கூட்டம் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சிலர் குளிக்க வந்தனர். அவர்களில் ஒருவர், பாதுகாப்புக்கு நிற்கும் சப்-இன்ஸ்பெக்டரிடம் சென்று, நான் இன்னாரின் பேரின், இன்னாரின் மகன் என்று கூறியுள்ளார்.
நானும் எனது நண்பர்களும் குளிக்க வேண்டும், அதுவரை மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த சப் இன்ஸ்பெக்டர், ஆடி அமாவாசை என்பதால் அப்படிச் செய்ய முடியாது. வேண்டுமானால் பாதுகாப்பு தருகிறேன் குளியுங்கள் என்றார்.
இதையடுத்து மேற் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த மப்டி காவலரை வரவழைத்து அவரை பாதுகாப்புக்கு அனுப்பி அந்த இளைஞரை குளிக்கச் செய்தார்.
கருப்பு டி-சார்ட், கருப்பு சார்ட் போட்டு முகத்தில் சவரம் செய்யப்படாத தாடியோடு வந்த அவர் அருவியில் நீராடினார். பின்னர் அருவிகரை பாதுகாப்பு பணியில் இருந்த அந்த எஸ்.ஐ, சக காவலரிடமும் சுற்றுலா பயணிகளிடமும் அந்த நபர் டாக்டர் ராமதாஸ் பேரனாம். மத்திய அமைச்சர் அன்புமணியின் மகனாம்.
அவர் குளிக்க விரும்புவதால் மற்றவர்களை காக்க வைக்க வேண்டும் என்றார். நான் முடியாது என்று கூறி விட்டேன் என்றார்.
இதைக் கேட்டதும், வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் எஸ்.ஐ-க்கு சபாஷ் போட்டனர். ஐந்தருவிக்கு வந்தது உண்மையில் ராமதாஸ் பேரனா என்பது தெரியவில்லை.
எது, எப்படியோ சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடந்து கொண்ட அந்த சப் இன்ஸ்பெக்டர் பாராட்டுக்குரியவர் என்று சுற்றுலா பயணிகள் கூறியதைக் கேட்க முடிந்தது.












Click it and Unblock the Notifications