மதுரையில் சோனியா: ராமேஸ்வரம் அகலரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மதுரை:ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதுதொடர்பாக மதுரையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார்.
மதுரை முதல் ராமேஸ்வரம் வரை மீட்டர்கேஜ் ரயில் பாதை இருந்து வந்தது. இதை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி முதலில் மதுரை முதல் மானாமதுரை வரை அகல ரயில் பாதை போடப்பட்டது.
பின்னர் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரையிலான பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டது. ரூ. 186,97 கோடி செலவில் இந்தப் பாதை அமைக்கும் பணி நடந்தது. இந்தப் பணியில் பாம்பன் பகுதியில் கடலில் உள்ள பாதையும் அடங்கும். பாம்பன் கடல் பாதை மட்டும் ரூ. 24 கோடி செலவில் அகலப் பாதையாக மாற்ற்பட்டுள்ளது .
இதையடுத்து மானாமதுரை - ராமேஸ்வரம் இடையிலான அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் ராமேஸ்வரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ரயில் பாதை தொடக்க விழாவை அன்று (அதாவது இன்று) வைத்தால் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படக் கூடும். எனவே தேதியை மாற்ற வேண்டும் என பாஜக மற்றும் இந்து மத அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து விழா மதுரைக்கு மாற்றப்பட்டது. அதன்படி மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமை தாங்குகிறார். முதல்வர் கருணாநிதி முன்னிலை வகிக்கிறார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் ராமேஸ்வரம் - மதுரை - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலை அவர் பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆர்.வேலு, தமிழக அமைச்சர்கள், மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.
விழாவில் பங்கேற்க சோனியா காந்தி இன்று மாலை 3.25 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவும் உடன் வந்தார்.
சோனியா மற்றும் லாலுவை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
அதன் பின்னர் சோனியா காந்தி பலத்த பாதுகாப்புடன், குண்டு துளைக்காத காரில் மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நிகழ்ச்சிக்காக முதல்வர் கருணாநிதி இன்று காலையே மதுரைக்கு வந்து விட்டார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சோனியா காந்தி வருகையையொட்டி மதுரை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடம், விமான நிலையம், விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் மைதானம் வரையிலான பாதை, தல்லாகுளம் அரசு சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.