அமெரிக்க ஒப்பந்தத்தால் அணு குண்டு சோதனைநடத்த தடையில்லை-பிரதமர்
டெல்லி:லோக்சபாவில் இன்று மத்திய கூட்டணி அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் மற்றும் எதிர்க் கட்சியினரின் கடும் அமளிக்கிடையே அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை பிரதமர் தாக்கல் செய்தார்.
இந்த ஒப்பந்தத்துக்கு பாஜக, மூன்றாவது அணியும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் ஆட்சியை ஆதரிக்கும் இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவோம் என இடதுசாரிகளும், வேண்டுமானால் ஆட்சியைக் கவிழ்த்துக் கொள்ளலாம் என பிரதமரும் சவால் விட்டுக் கொண்டனர்.
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கம் தரும் வகையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டார். அதற்கு முன் இன்று காலை இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து சாமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டனர்.
இன்று காலை அவை கூடியதும் சமாஜ்வாடிக் கட்சியினர் அவையின் மையப் பகுதியில் கூடி மத்திய அரசு அமெரிக்க ஏஜென்ட்டா என்று கேட்டு கோஷமிட்டனர்.
அதே போல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தைக் கைவிடக் கோரி கூச்சலிட்டனர். பாஜக எம்பிக்களும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
இதனால் அவையில் பெரும் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து அவையை அரை மணி நேரம் ஒத்தி வைத்தார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.
மீண்டும் அவை கூடியபோதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு அவை கூடியதும் பிரதமர் தனது அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது எதிர்க் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் அறிக்கையை வாசித்து முடித்தார் பிரதமர்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
1. இந்தியா அணு ஆயுத சோதனைகள் நடத்த இந்த ஒப்பந்தம் எந்தத் தடையும் விதிக்காது. அது நமது உரிமை.
2. 2020ம் ஆண்டில் அணு சக்தியால் 20,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில் வளர்ச்சியை மேலும் பல மடங்கு அதிகரிக்க முடியும்.
3. இந்த ஒப்பந்ததால் இந்தியா எதையும் இழக்கப் போவதில்லை. இரு நாடுகளுக்கும் பலன் தான் ஏற்படப் போகிறது.
பிரதமர் பேசியதே கேட்க முடியாத அளவுக்கு கூச்சலும் குழப்பமும் நிலவியது.
இந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என பாஜகவின் கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை. இடதுசாரிகள் ஆதரவின்றி ஓட்டெடுப்பு நடத்தினால் அது நிச்சயம் தோற்கடிப்படும், இதனால் அரசு கவிழும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு இந்தியா அடி பணியும் நிலை வரக் கூடாது என்பது இடதுசாரிகளின் நிலையாகும்.












Click it and Unblock the Notifications