டாடா : சாத்தான்குளத்தில் அரசுக் குழுவுக்குகருப்புக்கொடி- 18 பெண்கள் கைது
தூத்துக்குடி:டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க அமைச்சர் பொன்முடி தலையில் வந்த அரசுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் மரங்களில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அரசுக் குழுவுக்கு கருப்புக் கொடி காட்டிய 18 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய தேரி நிலங்களில் இருந்து டைட்டானியம் ஆக்ஸைட் தாதுவை பிரித்தெடுக்க டாடா நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதற்காக 16,000 ஏக்கர் நிலத்தை தமிழக அரசே கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு கொடுக்கவும் முடிவு செய்தது.
இதை பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
மேலும் கருத்துக் கேட்கிறோம் என்ற பெயரில் தினமும் ஏதாவது ஒரு கட்சியின் குழுவோ அமைப்பின் குழுவோ அங்கு சென்று வருகிறது.
இந் நிலையில் இன்று தமிழக அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் 13 பேர் கொண்ட குழு கருத்துக் கேட்பதற்காக சாத்தான்குளம் பகுதிக்கு வந்தது.
முன்னதாக மாஜி மந்திரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 9 பேர் கொண்ட அதிமுக குழுவும் இன்று இப் பகுதி மக்களை சந்தித்தது.
காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கே.ஏ.கிருஷ்ணசாமி தலைமையிலும் இன்று பொது மக்களிடம் கருத்துக் கேட்டார்.
இதையடுத்து கருத்துக் கேட்கச் சென்ற அரசுக் குழுவினருக்கு சாத்தான்குளத்தில் பெண்கள் கருப்புக் கொடி காட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கருப்புக் கொடி காட்டிய 18 பேரை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும், அரசுக் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு ெதரிவித்து சாத்தான்குளம் அருகே உள்ள கிராமங்களில் மரங்களில் கருப்புக் கொடிகளைக் கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் போலீஸார் அவற்றை அப்புறப்படுத்தினர்.
ஒரேநாளில் மூன்று குழுக்களும் ஒட்டு மொத்தமாக சாத்தான்குளம் பகுதிக்கு வந்ததால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications