60வது சுதந்திர தினம்-நாடு முழுவதும் பாதுகாப்பு
டெல்லி:இந்தியாவின் 60வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.உரையாற்றுகிறார்.
நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்துள்ள பெருமைமிகு பின்னணியில் 60வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் நாளை காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.
சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று இரவு 7 மணிக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துகிறார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவரது உரை இடம் பெறுகிறது.
பிரதீபா பாட்டீல் ஆற்றும் முதல் சுதந்திர தின உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக் கூடும் என்ற சந்தேகத்தால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி தவிர நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல நாட்டு தலைவர்கள் வாழ்த்து
அறுபதாவது சுதந்திர தின விழாவை கொண்டாட இருக்கும் இந்திய மக்களுக்கு பல நாட்டுத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில்...
தமிழகத்திலும் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள கொத்தளத்தில் உள்ள கொடி மரத்தில் முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.
அதன் பின்னர் வீர தீரச் செயல்களில் சிறந்து விளங்கியோருக்கான கல்பனா சாவ்லா விருது, கோட்டை அமீர் விருது உள்ளிட்டவற்றை அவர் வழங்குகிறார். மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது.
டிஜிபி முகர்ஜிக்கு முதல்வர் விருது
இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி டிஜிபி முகர்ஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விருது கிடைத்துள்ளது.
நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவின்போது முதல்வர் கருணாநிதி இந்த விருதினை அதிகாரிகளுக்கு வழங்குவார்.
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம்
1. டிஜிபி முகர்ஜி
2. டி.எஸ்.பி. அந்தோணி ஞானசேகர்
3. ஏ.எஸ்.பி. மயில்வாகணன்
4. கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் சுதர்ஷன்
5. எஸ்.பி. புவனேஸ்வரி
6. டிஎஸ்பி சுப்பையா
7. டி.எஸ்.பி. பாலசுப்ரமணியன்
8. இன்ஸ்பெக்டர் காளிதாசன்
9. இன்ஸ்பெக்டர் சிவக்குமார்
10. இன்ஸ்பெக்டர் பால்ராஜ்
11. இன்ஸ்பெக்டர் ராஜ்பாபு
12. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன்
13. இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி
கோவையில் சிறப்பு பாதுகாப்பு:
சுதந்திர தினத்தையொட்டி கோவை நகரில் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு மட்டும் விசேஷ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.