தூக்குத் தண்டனை கைதிக்கு சிறையில்சக கைதிகள் அடி-உதை
கடலூர்:கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை கைதியான ரமேஷ், சக கைதிகளால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பில்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து, நகைகளைக் கொள்ளையடித்து விட்டுத் கொலை செய்து புதைத்து விட்டு தப்பி விடுவார் ரமேஷ்.
பல ஆண்டுகளாக இவ்வாறு கொலை, கொள்ளை, கற்பழிப்பில் ஈடுபட்டு வந்த ரமேஷ் மீது 13 கற்பழிப்பு, 7 கொலை மற்றும் 22 வழிப்பறி வழக்குகள் தொடரப்பட்டன.
பெண்ணாடம் மற்றும் ஆவினன்குடி பகுதியில் இரு பெண்களை கற்பழித்துக் கொன்ற வழக்கில் சமீபத்தில் ரமேஷுக்கு விருத்தாச்சலம் விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டார் ரமேஷ்.
இந் நிலையில் ரமேஷ் நேற்று சிறையில் குளித்துள்ளார். அப்போது அவரைப் பார்த்து இரு கைதிகள் கேலி பேசி கிண்டலடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ரமேஷ் அவர்களைத் திட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இரு கைதிகளும் சேர்ந்து ரமேஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரமேஷ் படுகாயமடைந்தார்.
விரைந்து வந்த சிறைக் காவலர்கள் ரமேஷை அந்தக் கைதிகளிடமிருந்து மீட்டனர். படுகாயமடைந்த ரமேஷ், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் கடலூர் சிறையில் பரபரப்பு நிலவுகிறது. செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவும் இதை சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications