சிவகங்கை நகராட்சித் தலைவர் ஒருமனதாக தேர்வு: கொலையான முருகனின் நண்பர்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவராக கவுன்சிலர் நாகராஜ் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவர் முருகன். திமுகவைச் சேர்ந்த முருகனுக்கு தலைவர் பதவி தர கட்சி முன் வரவில்லை.
இதையடுத்து யேச்சையாக இந்தப் பதவியைப் பிடித்தார்.
இதனால் இவர் மீது திமுகவினர் கடுப்பில் இருந்தனர். இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி அவர் காரில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார்.
முருகன் கொல்லப்பட்டது தொடர்பாக கவுன்சிலர் மந்தகாளை, பொறியாளர் பாலா உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நகராட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடந்தது. இதில் சுயேச்சை கவுன்சிலரும், இறந்த நகராட்சித் தலைவர் முருகனின் நெருங்கிய நண்பருமான நாகராஜ் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாகராஜும் ஏற்கனவே திமுகவில் இருந்தவர் தான். கட்சியில் தனக்கு மதிப்பில்லாததால், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.
சுயேச்சை கவுன்சிலரான நாகராஜை நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தது, திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.