வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு- தமிழக மக்களுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:தமிழக அரசு கொண்டு வந்துள்ள, அமல்படுத்தியுள்ள அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் பொதுமக்கள் ஏகோபித்த ஒத்துழைப்பையும், ஆதரவையும் தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
60வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் முதல்வர், காவல்துறை அணிவகுப்பைப் பார்வையிட்டார். அதன் பின்னர் முதல்வர் கருணாநிதி ஆற்றிய சுதந்திர தின உரையில் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த 15 மாத கால திமுக அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டுப் பேசினார்.
கருணாநிதி பேசுகையில், வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதில் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். ஒவ்வொரு புதிய முயற்சியிலும் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும். அதற்கு அரசுடன் மக்கள் ஒத்துழைத்து நடக்க வேண்டும், அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டுதான் சமீபத்தில் சோனியா காந்தி மதுரைக்கு வந்திருந்தபோது, பல துறைகளிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் புதிதாக 11 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த முதலீடு ரூ. 11,83,000,00 கோடியாகும். இதன் மூலம் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 91 ஆயிரத்து 576 பேருக்கு 1 லட்சத்து 1623 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 61 ஆயிரத்து 211 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 1.51 லட்சம் மனைகள் சிறப்புத் திட்டத்தின் கீழ் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
3.38 லட்சம் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 80 ஆயிரத்து 797 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலவச காஸ் அடுப்புத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மேலும் 15 லட்சம் குடும்பங்களுக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்.
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் சொன்ன வாசகத்தை மறவாமல், நாடு, நகரம், கிராமம், குக்கிராமம், பட்டிதொட்டி அனைத்திலும் இந்த அரசின் பணிகள் பரவலாக நடந்து வருகின்றன.
ஏழை, எளியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சுதந்திரத்தின் பயன் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். அதற்குரிய பணிகள் அரசு மூலம் தொடர்ந்து நடந்திட வேண்டும். இந்த உணர்வோடுதான் ஒவ்வொரு நாளும் கடமையாற்றுகிறோம்.
உங்களுக்கு வாக்குறுதிகளை அளித்து, வாக்குகளைப் பெற்று, ஆட்சி அமைத்து பொறுப்பேற்ற நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை, என் தமிழ்நாடு, என்னுடைய தமிழக மக்கள், என் அருமை தமிழ் மொழி என்ற உணர்வோடுதான் திட்டங்களை சிந்திக்கிறேன். தோழமை கண்டுள்ள நண்பர்களின் துணையோடு அவற்றை செயல்படுத்துகிறேன். உங்கள் வாழ்வு சிறக்க தமிழகம் செழிக்க ஓய்வின்றி செயலாற்றி வருகிறேன் என்றார் கருணாநிதி.
பதக்கங்கள், விருதுகள்:
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பல்வேறு பதக்கங்கள், விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சிறந்த சமூக சேவகருக்கான விருதினை டிவி. சரஸ்வதி பெற்றார். சிறந்த மருத்துவருக்கான விருது டாக்டர் எஸ்.சுந்தருக்குக் கிடைத்தது. சிறந்த மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அதிகாரிக்கான விருது கரூர் மாவட்டம் கே.ஜாஸ்மினுக்குக் கிடைத்ததது.
சிறந்த தொழிலதிபருக்கான விருது தஞ்சாவூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு பெற்றார். இவரது தொழில் நிறுவனத்தில ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் திருநாவுக்கரசு என்பது குறிப்பிடத்தக்கது.
ஊனமுற்றோருக்கான சேவையில் சிறந்த நிறுவனமாக வேளச்சேரியில் உள்ள டாக்டர் ஜிடி போஸ் நினைவு மருத்துவமனைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது.
மகளிர் நலனில் சிறப்பாக செயல்படும் நிறுவனமாக திருவொற்றியூர் டிவிஎம் சேவா பாலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
விருதுகள் அனைத்தும் ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
வீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு யாருக்கும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications