விவசாய வளர்ச்சிக்கு ரூ. 25,000 கோடியில்திட்டம் - மன்மோகன் சிங்
டெல்லி:விவசாய வளர்ச்சி மற்றும் உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க ரூ. 25 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இந்தியாவின் 60வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிகழ்த்திய சுதந்திர தின உரிமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். பிரதமர் பேசுகையில், நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், அனைத்துப் பிராந்தியமும் வளர்ச்சிப் பெறுவதை எனது அரசு உறுதி செய்கிறது.
சாதாரண மக்களின் மேம்பாட்டுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடுபடும்.
விவசாயிகள் நலன் மற்றும் உணவு உற்பத்தியை அதிகரிக்க தனி கவனம் செலுத்தப்படும். இதற்காக ரூ. 25,000 கோடி முதலீட்டில் புதிய திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
இதுதவிர ஏராளமான ஐஐடிக்கள், ஐஐஎம்கள், ஐஐசிக்கள் தொடங்கப்படும். நாடு முழுவதும் புதிதாக 1600 ஐடிஐக்கள், 10 ஆயிரம் தொழில் கல்வி பள்ளிகள், 50 ஆயிரம் திறன் மேம்பாட்டு மையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த கசப்புணர்வு குறையத் தொடங்கியுள்ளது. உலகின் அனைத்து வல்லரசு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுடன் நமக்கு நல்லுறவு நிலவுகிறது.
உலகின் பல தரப்பட்டு நாடுகளுக்கிடையே பாலம் போல விளங்குகிறது இந்தியா. அமைதியும், வளமும் மிக்க நாடுகளுக்கு மத்தியில் இந்தியா வாழ விரும்புகிறது.
வறுமை ஒழிப்பு சாத்தியமானதுதான். வறுமையை முற்றிலும் ஒழிப்பது நமது கைக்கு எட்டும் தொலைவில்தான் உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் மூலமாக 100 நாள் குறைந்தபட் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 கோடி பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாம் சிலவற்றில் முன்னேறியிருக்கிறோம், சிலவற்றில் பின்தங்கியிருக்கிறோம். சிலவற்றில் ஓங்கியுள்ளோம், சிலவற்றில் தாழ்ந்துள்ளோம். ஆனால் வளர்ச்சியிலும், மறு சீரமைப்பிலும் நாம் தளர்வடைந்து விடவில்லை, முன்னேற்றப் பாதையில்தான் உள்ளோம் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications