எம்பி தொகுதி மாயம்-நாளை புதுக்கோட்டையில் பந்த்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை எம்பி தொகுதி நீக்கியதை எதிர்த்து நாளை அந்த மாவட்டம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
தொகுதிகள் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), திருமயம் என்று 6 சட்டமன்ற தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.
இதில் திருமயம் தவிர மற்ற அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் இருந்தவையாகும்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் புதுக்கோட்டை மாவட்ட எம்பி தொகுதி இல்லை.
அந்த மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை 4 வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) ஆகிய தொகுதிகள் திருச்சி எம்பி தொகுதியிலும்,
விராலிமலை தொகுதி கரூர் மாவட்ட எம்பி தொகுதியுடனும்,
ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை எம்பி தொகுதியுடனும்,
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் எம்பி தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுக்கோட்டை எம்பி தொகுதியே காலியாகிவிட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்ட அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளனர். இதையடுத்து அனைத்துக் கட்சியினரும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கூட்டம் புதுக்கோட்டை சில்வர் ஹாலில் நடைபெற்றது. அதில்,
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் உருவாக்கும் வரை போராடுவது, இதற்காக பொதுநல அமைப்புகளை உள்ளடக்கிய தொகுதி மீட்பு குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் பந்த் அனுசரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் பந்த்துக்கு ஆதரவு தந்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் நாளை ஸ்தம்பிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications