நான் சொன்னது என்ன? - பெர்னாண்டஸ் விளக்கம்
டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங் குறித்து நான் தவறாகவோ, அவதூறாகவோ எதுவும் கூறவில்லை. எனவே எனது பேச்சுக்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிரதமரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். சீனாவில் இப்படி நடந்திருந்தால் ஒரே ஒரு தோட்டாவால் நெற்றியில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
பெர்னாண்டஸின் இந்தக் கருத்து நாடாளுமன்றத்தில் நேற்று புயலைக் கிளப்பியது. காங்கிரஸ் உறுப்பினர்கள் கொந்தளித்து விட்டனர்.
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து பெர்னாண்டஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அறிக்கையை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும்.
நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்றால், அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் இப்படிச் செய்திருந்தால், உடனடியாக அவரை பதவியை விட்டு அனுப்பியிருப்பார்கள். சீனாவில் நடந்திருந்தால் ஒரே துப்பாக்கித் தோட்டாவால் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்று கூறியுள்ளேன்.
இதில் என்ன தவறு இருக்கிறது. நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் 6 ஆண்டுகள் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, சோனியா காந்தியின் தூண்டுதலின் பேரில், காங்கிரஸ் கட்சியினர் என் மீது தொடர்ந்து அவதூறுகளை இறைத்து வந்தனர்.
நான் பிரதமரை ஊழல்வாதி என்று ஒருபோதும் சொல்லவில்லை என்றார் பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications